மிஷ்கினின் ஆபாச பேச்சு.. வெடித்து எழுந்த அருள்தாஸ்! நெட்டிசன்கள் வரவேற்பு
சென்னை: 'பாட்டல் ராதா' எனும் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த இயக்குநர் மிஷ்கின், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார். அவரது பேச்சுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் படைப்பாளிகளால் கொண்டாடப்படும் வெகுசில இயக்குநர்களில் மிஷ்கினும் ஒருவர். ஆனால் சமீபத்தில் அவர் பேசியிருந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் நெகட்டிவான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. திமுக முன்னாள் எம்பியான செந்தில்குமார் மிஷ்கினின் பேச்சுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

"மிஷ்கின் மேடையில் பேசியது மிகவும் அநாகரிகமான அருவருப்பான பேச்சு. சிறிதளவும் நாகரிகமின்றி நான்காம் த(ரை)ர பேச்சாளரை போல் பேசியது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை முன்மாதிரியாக யாரும் பின்பற்றாதவாரு அவருக்கு கடின எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை உரியவர்கள் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அருள்தாஸ் மிஷ்கினுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். 2K LOVE STORY எனும் திரைப்படத்தின் விழா ஒன்றில் பேசிய அருள்தாஸ், "மிஷ்கின் இவ்வளவு வல்கராக பேச வேண்டிய அவசியமில்லை. அந்த வீடியோவை பார்த்தேன். தலைகுணிவாக இருந்தது. இந்த மேடையில் எவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வந்து பேசி சென்றிருக்கிறார்கள். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட பத்திரிகையாளர்கள் இந்திருந்தார்கள். குறிப்பா பெண் பத்திரிகையாளர்கள் இருந்தார்கள். அங்கு வந்து ஆபசமாக பேசுவது சரியல்ல.
வெளியில் பேசுங்கள். ஆனால் மேடை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது. அவ்வளவு புத்தகங்களை படித்திருக்கிறேன், உலக சினிமாவை பார்த்திருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் அப்புறம் என்ன அறிவு இருக்கிறது உங்களுக்கு? இப்படியான பேச்சுக்கள் இங்கு மட்டும் கிடையாது, தொடர்ந்து பல மேடைகளில் மிஷ்கின் இதுபோன்று பேசி வருவதை நான் பார்த்திருக்கிறேன். பாலாவுடனான ஒரு விழாவில், அவரை ஒருமையில் பேசுவது, நேற்று இளையராஜாவை ஒருமையில் பேசியது.. நீ முதலில் யார் இப்படி பேசுவதற்கு?
ஏற்கெனவே சினிமாக்காரன் என்றாலே கிலு கிலுப்பானவன் என்றுதான் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்போது நம்மை நாமே தாழ்த்தி பேசிக்கொள்வது சரியல்ல. இது என்னுடைய கண்டனமோ, வலியுறுத்தலோ அல்ல. என்னுடைய மனக்குமுறல்கள்தான்" எனறு அருள்தாஸ் பேசியிருக்கிறார்.
அருள்தாஸின் பதிலடி, சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எல்லோரும்தான் ஆபாசமாக பேசுகிறோம். ஆனால் அதை எங்கு, யாரிடம் பேசுகிறோம் என்பதில்தான் நாகரிகம் இருக்கிறது. எனவே, சினிமாக்காரர்களும் இந்த நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீங்க சொல்லுங்க மக்களே.. மிஷ்கின் பேசியது சரியா, தவறா? இல்லை இது போன்ற பேச்சுக்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாமா?












Click it and Unblock the Notifications