'உள்ளே' போலீஸ் ஸ்டேஷனில் மனைவியுடன் சீமான் - 'வெளியே' போலீசாருடன் நாம் தமிழர் 'தம்பிகள்' மோதல்!
சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அப்போது நாம் நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
2008-ம் ஆண்டு தம்மை சீமான் திருமணம் செய்தார்; பின்னர் சில ஆண்டுகளிலேயே சீமான் தம்மை ஏமாற்றிவிட்டார் என்பது 2011-ல் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார். அப்போது சமரசம் ஏற்பட்டு விஜயலட்சுமி தமது புகாரை திரும்பப் பெற்றார்.

பின்னர் சீமான் ஏமாற்றிவிட்டதாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டே இருந்தார் விஜயலட்சுமி. கடந்த மாதம் இறுதியில் சென்னை வந்த விஜயலட்சுமி சென்னை போலீசில் மீண்டும் சீமான் மீது புகார் கொடுத்தார்.
அதில், சீமான் 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் என்றெல்லாம் புதிய புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி, விஜயலட்சுமியிடம் வாக்கு மூலம் பதிவு செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனையையும் நடத்தினர்.
இதனடிப்படையில் சீமானை போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால் சீமான் இந்த சம்மனை ஏற்க மறுத்தார். மேலும் 2011-ல் வாபஸ் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மீண்டும் என்னதான் விசாரணை என கேள்வி எழுப்பினார். அத்துடன் செய்தியாளர்களிடம் விஜயலட்சுமி, அவருக்கு துணையாக வந்த தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி ஆகியோரை சரமாரியாக விமர்சித்தார் சீமான். மேலும் வீரலட்சுமியை வெட்டிப் போடுவேன் எனவும் மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் திடீரென சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றுவிட்டு பெங்களூர் சென்றார். சீமானிடம் பணம் வாங்கவில்லை என்றும் சீமானை எதிர்க்க முடியாமல் பெங்களூர் போவதாகவும் விஜயலட்சுமி கூறினார். ஆனால் சீமானிடம் பெரும் தொகை பணம் வாங்கிவிட்டார் விஜயலட்சுமி என்கிறார் அவருடன் இருந்த வீரலட்சுமி.

இப்பின்னணியில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான், விஜயலட்சுமி விவகாரத்தில் போலீசில் ஆஜரானார். அப்போது மனைவி விஜயலட்சுமியையும் அழைத்து வந்தார் சீமான்.
சீமான் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகும் போது நாம் தமிழர் கட்சியினர் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்தனர். போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். காவல் நிலையத்துக்குள் சீமான் மனைவி கயல்விழியுடன் சென்ற நிலையில் வெளியே நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications