’நாம் தமிழர்’ இடும்பாவனம் கார்த்தி, விஷ்ணுவிடம் என்ஐஏ அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி, நிர்வாகி விஷ்ணுவிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA, என்.ஐ.ஏ என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் தமிழருக்கு தனிநாடு கோரிய இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துடன் இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர். தற்போது வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி பல்வேறு தனிநபர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

என்.ஐ.ஏ. வழக்கு: மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆயுதப் போராட்ட இயக்கமாக கட்டமைக்க இந்தியாவில் போதைப் பொருட்கள் கடத்தல், ஆயுத கடத்தல் நடவடிக்கை மூலம் சிலர் பணம் திரட்டியதாக பிடிபட்டுள்ளனர். இந்த வழக்குகளை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
என்.ஐ.ஏ. விசாரணைக்கு சம்மன்: இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் தொடர்பிருக்கிறதா? என என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் விசாரணைக்கும் அழைக்கப்பட்டனர்.
அடுத்தடுத்து விசாரணை: இடும்பாவனம் கார்த்தியின் தந்தை மறைவால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து இன்று தாமும் நாம் தமிழர் கட்சியின் தென்னகம் விஷ்ணுவும் என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக இடும்பாவனம் கார்த்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பாக இடும்பாவனம் கார்த்தி ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல தென்னகம் விஷ்ணு என்ற நாம் தமிழர் பிரமுகரிடமும் என்.ஐ.எ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக நேற்று சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

சீமான் கண்டனம்: முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் மீதான இந்த நடவடிக்கைகளுக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர் கதையாகிவிட்டது. அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ் மண்ணின் வளங்களைக் காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அச்சுறுத்தும் நோக்கத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு தனது கைப்பாவையான தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் நடத்தியுள்ள அரசியல் பழிவாங்கும் போக்கினைக் கண்டித்துள்ள அனைவருக்கும் எனது அன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications