சிபிஎஸ்இ பாடத்தில் விஷமம்.. சென்னையில் நாளை நாடார் அமைப்பு உண்ணாவிரதம்! ராமதாஸ், சீமான் பங்கேற்பு
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடார் சமுதாயம் பற்றிய பகுதியை மாற்றம் செய்யாமல் காலம் தாழ்த்தும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் நாளை சென்னையிில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
நாடார் மக்கள் சக்தி அமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம், ஞாயிறு காலை 9 மணி முதல் 5 மணி வரை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த போராட்டத்தில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையார் மற்றும் நாடார் மக்கள் சக்தி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா ஆகியோர் எழுச்சி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி வைத்து குமரி அனந்தன், விஜிபி குழுமம் தலைவர் சந்தோசம், சென்னை வாழ் நாடார் சங்கம் தலைவர் சின்னமணி, முன்னாள் முதல்வர் காமராஜர் பேத்தி மயூரி ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர்.
கண்டன உரையாற்றி உண்ணாவிரத போராட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் நிறைவு செய்து வைக்கிறார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.
பல அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், அனைத்து நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக நாடார் மக்கள் சக்தி போராட்ட குழு அறிவித்துள்ளது.