ஆம்ஸ்ட்ராங் கொலை: கோர்ட்டுக்கு போன ரவுடி நாகேந்திரன்! திட்டவட்டமாய் மறுத்த நீதிபதிகள்! நடந்தது என்ன?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தற்போது நாகேந்திரனுக்கு சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 29 பேர் சிறையில் உள்ளனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது தந்தை நாகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இதுமட்டுமல்லாமல், இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
எனது மகன் அரசியலுக்கு வந்தாலும் முன்னேறாமல் இருப்பதற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம். எனவே தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டினேன் என பரபரப்பு வாக்குமூலம் அளித்தார் நாகேந்திரன். கொலை வழக்கு தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல்நல குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, வழக்கறிஞர் ஹமீது இஸ்மாயில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம் .எஸ் ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் இன்று முறையீடு செய்தார்.
அப்போது, சிறையில் இருக்கும் நாகேந்திரனுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேலூர் சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரினார்.
முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தற்போது நாகேந்திரனுக்கு சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரிய மனுவை பட்டியலிடுவது தொடர்பாக நீதிமன்ற பதிவாளரை அணுக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு பட்டியலிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications