மாணவர்களிடமே சாதிய நச்சு? சகிக்கவே முடியல.. நடுக்கம் தரும் நாங்குநேரி.. முதல்வர் ஸ்டாலின் வேதனை
சென்னை: நாங்குநேரியில் சாதிய பாகுபாட்டால் வீடு புகுந்து 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை 6 மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகத்தையே நடுங்க வைத்துள்ளது. இந்நிலையில் தான் மாணவர்களியே சாதிய நச்சு இருப்பது வேதனை தருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து மனம் வருந்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவரது மகன் சின்னத்துரை (வயது 17). வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார்.
இதுபற்றி அவரது தாயார் விசாரித்தார். அப்போது சின்னத்துரை தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது தாயார் பள்ளியில் புகார் செய்தார். பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்தியவர்களை அழைத்து கண்டித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டியுள்ளனர். தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். இருவரும் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் சாதியபாகுபாடு தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தற்போது கைதான 6 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் கூர்நோக்கு கண்காணிப்பு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சாதிய பாகுபாட்டால் ஏற்பட்ட இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சின்னத்துரையின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசினார். மேலும் அவர் சின்னத்துரையின் கல்லூரி படிப்புக்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு மாணவர்கள் பாகுபாடு இன்றி நடந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் நாங்குநேரி சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications