பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்றது.

20 இடங்களில் போட்டியிட்ட பாஜக நான்கு இடங்களில் வென்றது. கடந்த 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவரைத் தேர்ந்தெடுக்க தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், தமிழகத்தில் பாஜகவுக்கு இடம் இல்லை என்று சொன்னவர்களின் கருத்தைப் பொய்யாக்கும் வகையில், இப்போது தமிழகத்தில் தாமரை மலர்ந்துள்ளது. சட்டமன்றத்தைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களாக பாஜகவின் நான்கு எம்எல்ஏக்கள் செயல்படுவார்கள்.
அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவோம். தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் தமிழ் மொழிக்காகவும் பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள். எங்கள் பணி சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடரும்" என்றார்.
சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் களமிறங்கிய பாஜக கோவை தெற்கு, நாகர்கோவில், திருநெல்வேலி, மொடக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளைக் கைப்பற்றிது.
தற்போது பாஜக சட்டமன்ற குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சட்டசபைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் வெற்றிபெற்றவர்.












Click it and Unblock the Notifications