தோழர் நல்லகண்ணு.. அவர் வாழ்க்கையே ஒரு செய்தி! தன்னை முன்னிறுத்தாத தியாக வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
சென்னை: தன்னை முன்னிறுத்தாமல், விளிம்பு நிலை மக்களுக்காக, அவர்தம் உரிமைகளுக்காக காலமெல்லாம் பாடுபட்டவர் நல்லகண்ணு. பாதிக்கப்படும் மக்களுக்காக பயன்கருதாது தனது வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்த நல்லகண்ணுவின் வாழ்க்கையே அனைவருக்குமான ஒரு செய்தி.
சுதந்திர போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஆர். நல்லகண்ணு கடந்த 24 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். நல்லகண்ணுவுக்கு நேற்று மாலை முதல் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் காலமானார்.

நல்லகண்ணு
நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். தன்னுடைய 15 வயதிலேயே பொதுவுடைமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல தியாகங்களைச் செய்தவர். 1949 ஆம் ஆண்டு தலைமறைவு காலத்தில் தோழர் ஒருவரின் வீட்டில் நல்லகண்ணு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென போலீசார் அவரையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்தவர்.
மலை உச்சியிலிருந்து உருட்டி விடுவதாக மிரட்டியபோதும், தனது சக போராட்டக்காரர்களை காட்டித்த்ரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஒரு போலீஸ் அதிகாரி, நல்லகண்ணுவின் கையில் விலங்கு பூட்டி, சித்ரவதை செய்து, தலைகீழாகத் தொங்கவிட்டு அவரது மீசையையும், கன்னத்தையும் தீயிட்டு பொசுக்கினார். எனினும், கடைசிவரை நல்லகண்ணுவிடம் இருந்து எந்த பதிலையும் போலீசாரால் பெற முடியவில்லை.
ஏழை எளிய மக்களுக்காக
நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, ஆயுள் தண்டனையையும் அனுபவித்தார். இதுபோல பாறையைப் போன்ற உறுதியுனும், புலியைப் போல துணிச்சலுடன், எண்ணற்ற அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட அஞ்சாத சிங்கம்தான் தோழர் நல்லகண்ணு. விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்துள்ளார்.
ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு வந்தவர். மேலும் தன்னலமற்ற அரசியல்வாதியாக தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்து வந்தவர்.
அரசியலில் தூய்மை
அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்களே என்று கூறுபவர்கள் கூட நல்லகண்ணுவை அத்தகைய பட்டியலுக்குள் அடக்குவதில்லை. அதற்கு அவருடைய நேர்மையே காரணம். அவருடைய ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையிலிருந்து அவரது இறுதி வரை அவருடைய பேச்சு, எழுத்து மற்றும் போராட்டங்கள் என அனைத்தும் பல்வேறு வகைகளில் ஒடுக்கப்படுபவர்களின் உரிமைகளுக்கானதாகவே இருந்துள்ளது.
18 ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த நல்லகண்ணு, அன்றிலிருந்து 83 ஆண்டுகளாக பொதுவுடமைக் கொள்கையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர். வாழ்க்கை முழுவதும் பல போராட்டங்களில் பங்கேற்று, விவசாயிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு பயன்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
நல்லகண்ணுவின் வாழ்க்கையே ஒரு செய்தி
எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி, பொதுவுடமைக் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு, அதன் வழியில் வாழ்ந்து மறைந்த நல்லகண்ணு. தன்னை முன்னிறுத்தாமல், எப்போதுமே விளிம்பு நிலை மக்களுக்காகப் பணியாற்றிய மகத்தான தியாகி நல்லகண்ணு. அவரது வாழ்க்கை, சமூகத்துக்காகச் சிந்திக்கும் அரசியல்வாதிகள் அனைவருக்குமே முன்னுதாரணம். அவரது வாழ்க்கையே ஒரு செய்தி.












Click it and Unblock the Notifications