பண்பாட்டை அழித்து சூதாட்டம்.. உத்தம வில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே.. நமது அம்மா விளாசல்
Recommended Video
சென்னை: உத்தம வில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே என நமது அம்மா நாளிதழில் கமல்ஹாசன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து நமது அம்மாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருக்கையில், அதிமுகவினரை வியாபாரிகளாக பார்க்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார். இருக்காதா பின்ன, ஏறத்தாழ முடிவுக்கே வந்துவிட்ட அவரது திரையுலக வாழ்வை அரசியல் மூலம் நீட்டித்துக் கொள்ளலாம் என்னும் சுயநலத்தோடு பொது வாழ்க்கைக்கு வந்தவர், கட்சி நடத்த மக்கள் காசு தர வேண்டும் என கையேந்தி பார்த்தார். ஆனால் தமிழகத்து மக்களோ நீ எடுத்த சினிமாக்களை எல்லாம் நாங்கள் காசு கொடுத்துதான் பார்த்தோம்.
ஆனால் அரசியலில் தொடருகிற உன் நடிப்பை காசு கொடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவரது ரசிகர்களுமே மறுத்துவிட்ட நிலையில்... சரி இனி சின்னத்திரையை வைத்தாவது காலத்தை ஓட்டலாம் என கணக்கு போட்டு தொடங்கிய நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

அத்துமீறிய சொற்கள்
ஒட்டுமொத்த கலாச்சார சீரழிவின் குப்பைக் கூளமாக அந்நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்துகிற கமல்ஹாசன் தமிழக அரசியலையும் குறிப்பாக கரை வேட்டி கட்டுகிற அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதன் மூலம் தன்னை உத்தமனாக சித்தரிக்க முயற்சிக்கிறார். கூடவே தன்னை நோக்கி விளம்பர வெளிச்சத்தை திசை திருப்ப அத்துமீறிய சொற்களால் அர்ச்சிக்கிறார்.
|
திரைப்படங்கள்
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உழைத்து சேர்த்ததையெல்லாம் ஊருக்கே கொடுத்தவர். அரிதாரம் பூசி, ஆடிப்பாடி நடித்த காலத்திலும் தன்னிடம் இருந்து இச்சமூகம் நல்லதை மட்டும் பெற வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக உழைத்தவர். பொழுதுபோக்கும் சினிமாவை தமிழ் சமூகத்தின் பழுது நீக்கமும் சாதனமாக மாற்றி தேசபக்தி, மொழிப்பற்று இனமானம், பெண் விடுதலை, சமூக நீதி ஆகிய அனைத்தையும் தன் திரைப்படங்கள் மூலம் திரைப்பாடங்களாக போதித்தவர்.

அச்சுப்பிசகாமல்
மேலும் நடித்து சேர்த்த தனது சம்பாதியத்தை ஏழை எளியோருக்கு உடையாக ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு குடையாக வாரி வழங்கியவர். அதன் விளைவாக தமிழகத்தின் முடிசூடா மன்னனாக மண் விட்டு மறைந்தாலும் மக்களின் கண்விட்டு மறையாத காவியமாக எளியோரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறையாசனமிட்டு இன்றும் என்றும் வாழ்கிறார். அவர் உருவாக்கிய இயக்கம் அவரது பாதத் தடத்தில் அச்சுப்பிசகாமல் பசி போக்கும் அட்சய பாத்திரமாக, படிப்புத் தரும் கொள்கை பீடமாக, மரத்தடி வகுப்புகளை மடிக்கணினி வகுப்புகளாக மாற்றி அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் ஆலயமாக, நதி உரிமை காத்து உழவினத்தை உயிராக போற்றுகிற நல்லோர்களின் இயக்கமாக, திரைகடல் ஓடி முதலீடுகளை திரட்டுகிற திறமைகளின் குவியலாக இன்னும், இன்னுமாக மக்களின் நல்வாழ்வுக்கு நாளெல்லாம் உழைக்கிற கழகத்தையும் அதன் அரசையும் விமர்சிக்கிற கமல்ஹாசன் இச்சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்ததும், அவர் கற்றுக் கொடுத்ததும் என்ன என்பதை பட்டியலிட்டு சொல்ல வேண்டும்.

இனி காலம் தள்ள முடியாது
அதைவிடுத்து முத்திபோன முகத்தை வைத்து இனிமேலும் காலம் தள்ள முடியாது என்னும் நிலையில் மக்களுக்கு ஊழியம் செய்கிற மகத்தான அரசியலை தன் பிழைப்புக்கான ஆதாய சூதாட்டமாக்க அலைகிற இவர் அதிமுகவினரை வியாபாரிகள் என்றெல்லாம் விமர்சிக்கலாமோ? மருதநாயகம் படம் எடுக்கிறேன் என்று பிரிட்டிஷ் ராணியை அழைத்து வந்து பிலிம் காட்டி பித்தலாட்டம் செய்தவருக்கு புத்தி போதிக்கும் யோகியதை உண்டா? பிக்பாஸ் பெயரால் பண்பாட்டை சீரழிக்கும் குத்தாட்ட மடத்தை நடத்தி கோடிகளை குவிப்பதில் குறியாக இருக்கும் உளறல் நாயகன் தன்னை உத்தம வில்லன் என சொல்லிக் கொண்டாலும் இப்போதைய அவரது போக்கும், புலம்பலும் மொத்தமும் வில்லனாகவே காட்சி அளிக்கிறது. வெட்கம், வெட்கம்! என அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications