விஜய் பாஜகவின் ‘பி’ டீமா? நாஞ்சில் சம்பத் சொன்ன நச் பதில்!
சென்னை: நடிகர் விஜய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் இரண்டு யோசனைகளைக் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தி உள்ளார் நடிகர் விஜய்.

இவரது வருகை ஆளும் கட்சி தொடங்கி அண்ணாமலை வரைக்கு ஒரு அதிர்வை அளித்துள்ளது.
ஏற்கெனவே பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் பல மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறது. அதற்கு என்று ஒரு கொடியைக் கூட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தக் கொடி விஜய் முகத்துடன் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருந்துவருகிறது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நிறைய இடங்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். அப்போதே விஜய்யின் அரசியல் அத்தியாயம் ஆரம்பமாகிவிட்டதாகப் பலரும் கூறினர்.

ஆனாலும், அவர் வெளிப்படையாக எதையும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில்தான் கட்சியின் பெயரை அறிவித்து அவரது ரசிகர்கள் உட்படத் தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் விஜய்.
விஜய்யின் அரசியல் கட்சி குறித்து, அவர் முன் உள்ள சவால்கள் குறித்து மூத்த அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் சில விசயங்களைக் கூறியுள்ளார்.
"நடிகர் என்றால் அது சிவாஜிதான். எம்.ஜி.ஆரைவிட சிவாஜிதான் நடிகர். எல்லா நடிகர்களுக்கும் கண்கள்தான் பேசும். சிவாஜிக்கு அவரது உடலே பேசும். அந்த சிவாஜி கணேசன் தேர்தலில் தோற்றுவிட்டார். எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அணியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் தோற்றார். பின் ஜனதா தளத்துடன் தனது கட்சியை இணைத்துவிட்டார்.

இது தம்பி விஜய்க்கு ஒரு பாடம். நல்ல காதல் படங்களைத் தந்து உள்ளத்தை அள்ளிக்கொண்டவர் நடிகர் கார்த்திக். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயரைச் சொல்லக்கூடிய ஃபார்வேர்ட் ப்ளாக் கட்சியின் தலைவர் என்று சொன்னார். அப்புறம் கட்சியைத் தொடங்கினார். அவரைக் காணவில்லை.
எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசு என அடையாளம் காணப்பட்ட பாக்யராஜ் தனிக் கட்சி தொடங்கினார். அவரால் ஜெயிக்க முடியவில்லை. மிகப் பெரிய திறமைசாலி டி ராஜேந்தர்.
ஒரே நேரத்தில் இசையமைத்து திரைக்கதை எழுதி இயக்கி நடிக்கும் அளவுக்குத் திறமை பெற்றவர். ஆல் ரவுண்டர். தமிழ் ஞானம் உள்ளவர். 'இது குழந்தை பாடும் தாலாட்டு' என்று எழுதினார் பாருங்கள். அப்படி யாராலும் சிந்திக்க முடியாது. தமிழ் படித்த சம்பத் சொல்கிறேன். இப்போது அவரது லட்சிய திமுக இருக்கிறதா? இல்லையா என்று தெரியவில்லை.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். விளிம்புநிலை மக்களுடைய ஆதரவைப் பெற்றார். அவர் ஒரு நல்லவர் என மக்கள் நம்பினார்கள். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தைப் பெற்றார்.
ஆகவே, நடிகர்கள் கட்சி தொடங்கினால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம், என்பது தமிழ்நாட்டில் இனிமேல் ஒத்துவராது.
2011 இல் ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகுத் தனது விஜய் மக்கள் இயக்கத்தினரை அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கச் சொன்னார்.
விஜயிடம் உள்ள ஒரே ப்ளஸ் பாயிண்ட். அவர் மார்க்கெட் போன நடிகர் இல்லை. உச்சத்தில் உள்ள ஒரு கதாநாயகன். அதை உதறி எரிந்துவிட்டு வருகிறார். இது மிகப்பெரிய நம்பிக்கையை மக்களுக்குக் கொடுக்கும்.

அவர் சொல்கிறார், நான் பொழுது போக்குக்காகக் கட்சியைத் தொடங்கவில்லை. எனக்கு அரசியல் வேட்கை இருக்கிறது. அதற்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காக வருகிறேன் என்கிறார்.
விஜய்யை பாஜக பாஜகவின் பி டீம் என்கிறார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி அவர் பாஜகவின் பி டீமாக செயல்பட்டால், அவர் கட்சி தமிழ்நாட்டில் காணாமல் போய்விடும்.
விஜய்க்கு நான் சொல்வது ஒன்றுதான். அவரை விடப் புகழ்பெற்றவர் சிரஞ்சீவி. அவருக்குக் கூடிய கூட்டம் வேறு யாருக்கும் ஆந்திராவில் கூடியதில்லை. எடுத்த எடுப்பிலேயே ஏதோ 18 தொகுதிகளை வென்றதாக நினைவு. அதற்கு மேல் அவரால் கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. தொலைந்து போய்விட்டார்.
ஆகவே விஜய் இதிலிருந்து எல்லாம் பாடம் கற்றுக் கொண்டு மக்களுக்குத் தேவையான புதிய விசயங்களை என்ன செய்ய முடியும்? என்ன அரசியல் கொள்கையை முன்வைக்க முடியும் என்று யோசிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications