திமுக கூட்டணிக்கு ஆதரவு.. திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன்.. நாஞ்சில் சம்பத் பரபர
சென்னை: திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்துவிட்டு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் பேட்டி அளித்தார்.
அப்போது பாஜகவை நான் வெறுக்கிறேன். எனக்கு பிடிக்கவில்லை. அதனால் காவியத் தலைவன் ஸ்டாலினை சந்தித்தேன். அவர் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட போகிறேன்.

கண்ணுக்கு தெரியாத உறுப்பினர்
வரும் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறேன். நான் திமுகவில் கண்ணுக்கு தெரியாத உறுப்பினராக உள்ளேன் என்றார் நாஞ்சில் சம்பத்.

விலகல்
மதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். கட்சி தலைமை வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு நாஞ்சில் விலகினார்.

கார்
பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு நட்சத்திர பேச்சாளர் என்ற அந்தஸ்தை கொடுத்தார் ஜெயலலிதா. பிரசாரத்துக்காக இன்னோவா காரையும் கொடுத்தார்.

பக்கபலம்
இந்த நிலையில் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த 2016-ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். இதையடுத்து சசிகலா தலைமையை ஏற்க விரும்பவில்லை என கூறியவர் திடீரென அவரிடம் சரணாகதியாகிவிட்டார். பின்னர் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக இருந்தார்.

விலகல்
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இதில் திராவிடம் இல்லாததால் தன்னால் அக்கட்சியை ஏற்க முடியாது என கூறி அக்கட்சியிலிருந்து விலகியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார் நாஞ்சில்.












Click it and Unblock the Notifications