கடைசி நேரத்தில்.. மேடைக்கு அழைக்கப்பட்ட நயினார்.. கீழே அமர வைக்கப்பட்ட அண்ணாமலை.. மோடி மூவ்
சென்னை: நேற்று பிரதமர் மோடியால் புதிய பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது. ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) ரயில் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடந்த சம்பவம் ஒன்று திமுக கூட்டணி கட்சி ஆதரவாளர்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.

சுவாரசிய சம்பவம்
நேற்று நடந்த நிகழ்வில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திடீரென மேடையில் அமர வைக்கப்பட்டார். கடைசி நேரத்தில் வந்த அழைப்பு காரணமாக மேடையில் சேர் போட்டு அமர வைக்கப்பட்டார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் கீழே அமர வைக்கப்பட்டனர். நயினார் நாகேந்திரன் மேலே அமர வேண்டும் என்று கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாக நயினார் நாகேந்திரன் மேலே அமர வைக்கப்பட்டார்.
அண்ணாமலை கீழே இருக்கும் போது நயினார் நாகேந்திரன் மேலே அமர்ந்து இருந்த காட்சி, அண்ணாமலை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏ என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மேடையின் மேலே அமர வைக்கப்பட்டு இருந்தார் என்றாலும், வானதியை ஏன் கீழே உட்கார வைத்தார்கள் என்ற கேள்வி சேர்ந்தே எழுகிறது. தமிழக பாஜகவின் சட்டசபைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன். அதை தாண்டி சிறப்பு தகுதி கிடையாது எனும்போது வானதிக்கு தராத முக்கியத்துவம் நயினாருக்கு எப்படி என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
நயினார் நாகேந்திரன் நியமனம்
2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.
அண்ணாமலை மாற்றம்
2026 மாநிலத் தேர்தலில் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றால் கூட்டணி நெருக்கமாக இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலையை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அண்ணாமலையை மாற்ற ஒரு ஆலோசனை நடக்கிறதாம்.
அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சந்திப்பு இரு தரப்பிலும் சுமுகமாகவும் சீரியசாகவும் நடந்துள்ளன. எடப்பாடியின் நடவடிக்கையில் எப்போதும் கடுகடுப்பாக இருக்கும் அமித் ஷா, இந்த முறை இயல்பாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தும். வேறு கூட்டணிக்கு அரித்மேட்டிக் வாய்ப்புகள் கிடையாது. வேறு கூட்டணியால் எதுவும் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம், என்று இவர்கள் பேசி உள்ளனர். இதையடுத்தே பாஜக தலைவர் பதவி மாற்றப்படலாம் என்கிறார்கள்.
ஜாதி ரீதியிலான இரண்டு கட்சியிலும் கவுண்டர்கள் இருந்தால் அது கூட்டணிக்கு பலன் தராது. அதனால் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஜாதி பிரிவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் வந்தால் அது பாஜகவிற்கும் பலன், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் பலன் என்பதால் அவரை தலைவராக்க டெல்லி ஆலோசனை செய்கிறதாம். தென்மாவட்டங்களில் சரிவே பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் ஆகும். அதோடு நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் நட்பாக செல்ல கூடியவர்.
இதன் காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது
உறுதி
தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட அண்ணாமலை பதவி விலகுவது அல்லது நீக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
இதனால் புதிய தலைவர் பதவிக்கு 6 பேர் லிஸ்டில் உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம், டெல்லியை சேர்ந்த தமிழ் பின்புலம் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆகியோர் உள்ளனர். அதே சமயம் வானதி சீனிவாசன் கூட்டணியை உருவாக்குவதில் திறமைசாலி. கடந்த முறை சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாக பேச்சுவார்த்தை நடத்தியது இவர்தான்.
அதோடு சிட்டிங் எம்எல்ஏ. எந்த சர்ச்சையும் இல்லை. கூட்டணியை அனுசரித்து செல்வார். சர்ச்சையாக பேச மாட்டார். ஒரு சாப்ட் முகம் உள்ளது. அரசியல் நுணுக்கம் உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் ரேஸில் உள்ளனர். இதில் நயினார் நாகேந்திரன் கையே ஓங்கி உள்ளது.
நேற்று பாம்பன் பாலம் திறப்பு நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, உயர்தரமான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ஒரு சிறப்பான நாள். புதிய பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது. ராமேஸ்வரம் - தாம்பரம் (சென்னை) ரயில் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம், எளிதான வர்த்தகம் மற்றும் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தை நோக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நமது வளர்ச்சிப் பயணத்தைத் துரிதப்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு எப்போதுமே முக்கிய பங்கு வகிக்கும்.
ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன். தமிழ்நாட்டுக்கு 10 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரிகள் தந்தது மத்திய அரசு. ஆனாலும் சிலர் அழுகிறார்கள். 10 ஆண்டுகளில் 3700 மீனவர்களை சிறைகளில் இருந்து மீட்டுள்ளோம். தமிழக தலைவர்கள் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடவில்லை.
எனக்கு அனுப்பும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக ரயில்வேக்கு 7 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கியுள்ளோம். 2014 க்கு முன்பு இருந்த அரசு ஒதுக்கியதை விட 3 மடங்கு அதிகமாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications