முரசொலி விவகாரம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்.. 19-இல் விசாரணை
Recommended Video
சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன்- படம் மட்டுமல்ல. பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தை சாடும் ஜாதி வன்மத்தை கேள்விக் கேட்கும் துணிச்சல்காரன் என பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று முரசொலி அலுவலகத்துக்காக கையகப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் ஒப்படைப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

விலகத் தயார்
இதற்கு பதிலளித்த ஸ்டாலின் முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலமே இல்லை. வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான பட்டா மனை. பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார் என கூறியிருந்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்
இந்த நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதால் அந்த அலுவலகத்தை மூடுவோம் என பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

உதயநிதிக்கு நோட்டீஸ்
இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் கூறினார். புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

19-இல் விசாரணை
முரசொலி அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் உதயநிதி என்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 19-ஆம் தேதி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் முருகன், உதயநிதியிடம் விசாரணை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications