பாலியல் புகார் எதிரொலி.. ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது அதிரடியாக ரத்து!
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள விழாவில் தேசிய விருது வழங்கப்பட இருந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவாலா உள்ளிட்ட பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குநராவார். ஜானி மாஸ்டர் மீது அண்மையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது, 21 வயது இளம் பெண்ணை அவருடைய 16 வயதிலிருந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஜானி தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜானி மாஸ்டர் பெங்களூரில் பதுங்கியிருந்த நிலையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு இருந்தார். இதற்கிடையே, தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே..' என்ற பாடலுக்காக தேசிய விருது ஜானி மாஸ்டருக்கு கடந்த ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டது. தேசிய விருது வழங்கும் விழா வரும் 8ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது.
தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஜானி மாஸ்டர், தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இன்று முதல் 10ஆம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டர், ஆந்திரா மாநிலத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர் மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து ஜானி மாஸ்டரை தனது கட்சியில் இருந்து நீக்கி பவன் கல்யாண் நடவடிக்கை எடுத்தார். அது போல் தெலுங்கு சினிமாவிலும் ஜானி மாஸ்டருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications