வாடகைத் தாய் விவகாரம்.. தப்பிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்! சிக்கிய மருத்துவமனை
சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டதில் விதிமீறல் நடைபெறவில்லை என்றும், மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறியுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டையர்கள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
4 மாதத்தில் எப்படி குழந்தை என்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். பின்னர் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சொல்லப்படுகிறது. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பிறகுதான் வாடகைத் தாய் முறையை செயல்படுத்த முடியும் என்ற விதி உள்ளது.

4 மாதங்கள்
ஆனால் இவர்களுக்கோ திருமணமாகி 4 மாதங்கள்தான் ஆகிறது. எனவே இதில் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த விவகாரம் பெரிதானதால் இதுகுறித்து சுகாதாரத் துறை விசாரணை நடத்த இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நயன்தாராவுக்கு சிகிச்சை அளித்ததாக சொல்லப்படும் சென்னையின் பிரபல மருத்துவமனையில் விசாரணை நடத்தப்பட்டது.

5 ஆண்டுகள்
இந்த நிலையில் தங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்துவிட்டதாக மருத்துவக் குழுவிடம் நயன்தாரா தம்பதி விளக்கமளித்ததாக தெரிகிறது. மேலும் வாடகைத் தாய் சட்டம் அமலாவதற்கு முன்பே இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் விளக்கமளித்ததாக தெரிகிறது.

வாடகைத் தாய் விவகாரம்
இந்த நிலையில் வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் நேற்று சுகாதாரத் துறை விசாரணை நடத்தியது. அது போல் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பிலும் விளக்கம் பெறப்பட்டுள்ளது.

வெளியான அறிக்கை
இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரத்தில் விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், "வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விதிமீறவில்லை. ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிகளின்படியே வாடகைத் தாய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். வாடகைத் தாய்க்கு உரிய வயதும், ஒரு வயதில் ஏற்கனவே ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

விதிமீறிய மருத்துவமனை
இதேபோல் குழந்தை பேறு செய்த மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை செய்த சுகாதாரத்துறை விதிமீறலில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளது. "சினைமுட்டை சிகிச்சை தொடர்பான நோயாளியின் பதிவேடு, சிகிச்சை தொடர்பான முறையாக பராமரிக்கப்படவில்லை. வழிகாட்டு நெறிகளை பின்பற்றாத தனியார் மருத்துவமனை நடத்தும் செயற்கை கருத்தரித்த மையத்தை ஏன் மூடக்கூடாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications