"35+15+10.." இதுதான் என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு கணக்கு.. எடப்பாடி எடுக்க போகும் முடிவு என்ன!
சென்னை: திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வரும் நிலையில், அதிமுக பக்கம் அது குறித்து பேச்சே வராமல் இருக்கிறது. இதற்கிடையே பிரதமர் மோடி இப்போது பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாடு வந்துள்ள சூழலில், பிரதமர் பயணத்திற்கு பிறகே பிறகே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 23ம் தேதி நடந்த என்டிஏ கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்டிஏ தலைவர்களும் மேடை ஏறினார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் தங்களின் கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக ஒரே மேடையில் ஏறினர். என்டிஏ கூட்டணியின் வலிமையை உணர்த்தவே இந்த கூட்டம் நடந்தது.

பிரதமர் மோடி
இருப்பினும், அதன் பிறகு கூட்டணி பிரச்சாரம் டல்லடிக்க ஆரம்பித்தது. இப்போது பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வந்து சென்றுள்ள நிலையில், மீண்டும் என்டிஏ கூட்டணி உத்வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும், என்டிஏ கூட்டணியை முன்கூட்டியே உறுதி செய்தாலும் கூட இன்னும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கவில்லை. அது எப்போது என்பதில் தெளிவு இல்லாத சூழல் இருக்கும் நிலையில், மோடியின் இந்த பயணத்திற்கு பிறகே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் எனத் தெரிகிறது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதை உறுதி செய்தார்.
இந்தத் தேர்தலில் அதிமுகவே அதிக இடங்களில் போட்டியிடும்.. அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அதிமுகவின் திட்டமாக இருக்கும் சூழலில், அதற்குத் தேவையான இடங்களில் போட்டியிடும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதிப் பங்கீடு
பாஜகவை பொறுத்தவரை 2024 லோக்சபா தேர்தல் வாக்குகளை வைத்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதிமுகவிடம் இருந்து அதிகபட்ச இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனச் சொல்லப்படுகிறது.. அதிமுக இன்னும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அறிவிக்கவில்லை என்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது..
என்டிஏவுடன் இருப்பதால் பாஜக உடனேயே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். அதிமுக தலைமையுடன் பேசுவதற்கு அவர் தாயாராக இல்லை. கூட்டணியில் இணைந்தாலும் கூட இரு தரப்பிற்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
பாஜக கேட்கும் இடங்கள்
பாஜக 50 இடங்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் 35 இடங்கள் வரை பாஜக இறங்கி வரலாம் எனச் சொல்லப்படுகிறது. அதற்குக் கீழ் போக பாஜக ரெடியாக இல்லை. மறுபுறம் டிடிவி தினகரன் குறைந்தபட்சம் 15 சீட் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். குறிப்பாகத் தென்தமிழகத்தில் குறைந்தது 10 இடங்களில் போட்டியிட அமமுக விரும்புகிறது.
அன்புமணி ராமதாஸ்
அதேபோல அன்புமணி ராமதாஸ் 10 இடங்களைக் கேட்கிறார்.. இரட்டை இலக்கத்தில் தான் போட்டியிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்றக் கழகம் போன்ற சிறிய கூட்டணிக் கட்சிகளும் பாஜக உனேடேய இப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறது. அவர்கள் தலா இரண்டு இடங்களைக் கேட்டுள்ளதாம். இது தாண்டி புதிய தமிழகம் உள்ளிட்ட வேறு கட்சிகளையும் உள்ளே கொண்டு வர பாஜக முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications