பசுக்களுக்கு மட்டும் அரவணைப்பு? காளைகள் பாவமில்லையா? ஜல்லிக்கட்டு சங்கம் எழுப்பிய 'திடீர்' கோரிக்கை!
பசுக்களுக்கு மட்டும் அரவணைப்பு தினமா, காளைகளுக்கும் வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம்.
சென்னை : பிப்ரவரி 14ஆம் தேதி பசு அரவணைப்பு தினத்தை கொண்டாடுவதாக அறிவித்துள்ளதைப் போல, ஜனவரி 16ஆம் தேதி காளைகளை அரவணைக்கும் தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதியை மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளது.
காதலர் தினகத்தை பசு அரவணைப்பு நாளாக கொண்டாட வேண்டும், அதன் மூலம், மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும், இந்திய கலாச்சாரம் காப்பாற்றப்படும் என விலங்குகள் நல வாரியம் கூறியுள்ளது.

காதலர் தினம்
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் சந்தித்து தங்கள் காதலை பகிர்ந்து கொள்கிறார்கள். தங்கள் காதலை புதிதாகத் தெரிவிப்பதற்கான நாளாகவும் இந்த நாளை கொண்டாடுகின்றனர். அதேசமயம், காதலர் தினம் கொண்டாடுவதே கலாச்சார சீரழிவு என விமர்சிப்பவர்களும் உண்டு. இந்நிலையில் உலக காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

பசு அரவணைப்பு தினம்
வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று பசு மாடுகளை கட்டிப் பிடித்து அன்பு செலுத்துமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விலங்குகள் நல வாரியம், பசுக்களின் நலனை கருத்தில் கொண்டு இதை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேற்கத்திய காலாச்சார வளர்ச்சியால் நமது வேத கால பழக்க வழக்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும், அதனால் பசுவை அரவணைப்பதன் மூலம் உணர்ச்சிப் பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

பசுக்களுக்காக
மத்தியில் ஆளும் பாஜக அரசு பசு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்புக்கு தனிச்சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அதோடு கோசாலை உள்ளிட்டவைகளும் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்று பசு அரவணைப்பு தினம் கொண்டாட விலங்குகள் நல வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

காளை மாடுகள் பாவமில்லையா
இந்தநிலையில் பசுக்களுக்கு மட்டும் தான் அரவணைப்பு தினம் கொண்டாடுவீங்களா, காளை மாடுகள் என்ன சொம்பையா எனக் கேட்கும் வகையில் காளைகளுக்கும் அரவணைப்பு தினம் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் சார்பாக அதன் மாநில இளைஞரணி தலைவர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

காளைகள் அரவணைப்பு தினம்
அந்த அறிக்கையில், இந்திய விலங்குகள் நல வாரியம் 06/02/2023 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 14ஆம் தேதி பசு அரவணைப்பு தினமாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. அதேபோல் ஜனவரி 16ஆம் தேதி காளைகள் அரவணைப்பு தினமாக (Bull Hug Day) கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications