நெல் ஜெயராமனை சிறப்பித்த தமிழக அரசு... பள்ளி புத்தகத்தில் பாடமானார்
சென்னை: 12ம் வகுப்பு தாவரவியல் பாட புத்தகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் குறித்த தகவல்களை தமிழக அரசு சேர்த்துள்ளது .
பாரம்பரிய நெல் வகைகளை தேடி, அவற்றை காப்பதில் அயராது உழைத்தவர் நெல் ஜெயராமன். இவரது பணியை போற்றும் வகையில், நெல் ஜெயராமன் குறித்த குறிப்பை 12ஆம் வகுப்பு தாவரவியல் பாடப்புத்தகத்தில் வைத்து தமிழக அரசு சிறப்பித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் நம்மாழ்வாரின் வாரிசாக இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி வந்தவர், நெல் ஜெயராமன். இவர் யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து அதனை விளைவித்து வந்தவர்.
ஆண்டுக்கு ஒருமுறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி பலருக்கும் பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் கடந்தாண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார்.
புகழ்பெற்ற தாவரவியலாளர்களான நார்மன் இ.போர்லாக் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோரின் வரிசையில் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த நெல் ஜெயராமன் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நிலையில், 12ஆம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக மாறியுள்ளார்.












Click it and Unblock the Notifications