நெல்லை உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி-உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் இடமாற்றம்-தமிழக அரசு அதிரடி
சென்னை: விசாரணைக்கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், நெல்லை எஸ்.பி சரவணை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜனும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. விசாரணைக் கைதிகளை கொடூரமாக சித்ரவதை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பல்வீர்சிங்கை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. பல்வீர் சிங் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நியமிக்கப்பட்டார். உதவி கலெக்டர் முகம்மது சபீர் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் போலீசார் உள்பட 13 பேர் இதுவரை ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளித்துள்ளனர். பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட காவல் அதிகாரிகள் மீது தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல்லை எஸ்.பி சரவணை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் அம்பாசமுத்திரம் உளவுத்துறை உதவி ஆய்வாளர் மகாராஜனும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications