பக்ரீத் அன்றும் பணிக்கு வரணுமா? முதல்வர் ஆக்ஷன் எடுக்கணும்.. கோரிக்கை வைத்த நெல்லை முபாரக்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை நாளன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வரவேண்டும் என்று நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும் என்றும் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (ஜூன் 29) கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பி வர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை அன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருகை தரவேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், "பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு பெருநாள் விடுமுறையன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருகை தர நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசே! உடன் மேற்கண்ட உத்தரவை ரத்து செய்!" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நாளை (ஜூன் 28) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி இதில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் அளிக்க உள்ளார். ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
இதனை காரணமாக வைத்து, பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் மாணவர்கள் கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பினார். பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக இந்த அறிவிப்பு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பக்ரீத் விடுமுறை நாளன்றும் விடைத்தாள் திருத்தம் செய்ய பேராசிரியர்கள் வருமாறு சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளதைக் குறிப்பிட்டு, இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் நெல்லை முபாரக்.












Click it and Unblock the Notifications