நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்கள்.. விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்கு குட்நியூஸ்
சென்னை : சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-12689) இன்று (சனிக்கிழமை) முதலும், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயிலில் (12690) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு 3-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்-12689) இன்று (சனிக்கிழமை) முதலும், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரயிலில் (12690) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதலும் கூடுதலாக ஒரு 3-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படும்.

அதே போல, சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (20681) இன்று முதல் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி வரையும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் ரயிலில் (20682) இன்று முதல் அடுத்த மாதம் 19-ந்தேதி வரையும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22657) நாளை முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் ரயிலில் (22658) வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரையும் தற்காலிகமாக ஒரு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி - தென்காசி மார்க்கத்தில் செல்லும் பாசஞ்சர் ரயில்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், " மே 25 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் இருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி, வரும் 25.05.2025 (ஞாயிறு) முதல் நெல்லையில் இருந்து மாலை 6:20 மணிக்கு தென்காசி மார்க்கமாக புறப்படும் (வண்டி எண்: 56737) பயணிகள் ரயிலிலும், அதே நாளில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு நெல்லை மார்க்கமாக புறப்படும் (வண்டி எண்: 56738) பயணிகள் ரயிலிலும் கூடுதலாக தலா 2 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
இதே போல், வரும் 28.05.2025 (புதன்) முதல், செங்கோட்டையில் இருந்து காலை 6:40 மணிக்கு நெல்லை மார்க்கமாக புறப்படும் (வண்டி எண் 56736) பயணிகள் ரயிலிலும், அன்றைய தினமே நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு தென்காசி மார்க்கமாக புறப்படும் (வண்டி எண் 56735) பயணிகள் ரயிலிலும் கூடுதலாக தலா 2 பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பெட்டிகள் இணைப்பால், தினசரி இந்த மார்க்கத்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர் மிகுந்த பயனடைவார்கள் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications