மினு மினுக்கும் புதிய பிஎஸ்6 அரசுப் பேருந்துகள்.. சீட் பெல்ட் + போன் சார்ஜ்! இத்தனை வசதிகள் இருக்கா?
சென்னை: அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ் 6 ரக மஞ்சள் நிற அரசுப் பேருந்துகளில் இடம்பெற்று உள்ள நவீன வசதிகள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் சட்டப்பேரவையில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், சேசிஸ் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், 2023 - 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும், சேசிஸ் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 பிஎஸ் 6 பேருந்துகளை வாங்கி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும். கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும், என மொத்தம் 100 புதிய பிஎஸ் 6 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அடுத்த இரண்டு மாதங்களில் மீதம் உள்ள பேருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என அரசு தெரிவித்தது.
இந்த பிஎஸ் 6 ரக பேருந்துகளின் சிறப்பு அம்சங்கள் என்னவென்று பார்ப்போம். இந்த பேருந்துகள் பிஎஸ் 6 பேருந்துகளில் ஐந்து மடங்கு குறைவான கந்தகம் இருக்கும். நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றம் என்பது டீசலுக்கு 70 சதவீதமும், பெட்ரோல் இயந்திரங்களுக்கு 25 சதவீதமும் குறைக்கப்படும். அதேபோல் கார்பன் வாயுக்கள் வெளியேற்றத்தை கண்காணித்து கட்டுப்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும். டீசல் பார்ட்டிகுலேட் ஃபில்டர் (டிபிஎஃப்) மற்றும் செலக்டிவ் கேடலிடிக் ரிடக்சன் (எஸ்சிஆர்) போன்ற வசதிகள் பிஎஸ் 6 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வாகன உரிமையாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுநருக்கு வாகனத்தில் உள்ள அமைப்புகளின் செயல்திறனைத் தெரிவிக்கும் கருவி இதில் கட்டாயமாக இணைக்கப்படுகிறது. இது தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படும் விபத்துகள், போக்குவரத்து தடங்கல்களை கட்டுப்படுத்தும். வினைல் தரைகள், யுஎஸ்பியுடன் மொபைல் போனுக்கு சார்ஜ் போடும் வசதி, முதலுதவி பொருட்கள், அவசர கதவு பட்டன், ஸ்டாப் ஸ்விட்ச், சொகுசான இருக்கைகள், கடைசி இருக்கையில் அமர்வோருக்கு சீட் பெல்ட் பாதுகாப்பு, அப்டேட் செய்யப்பட்ட ஸ்டேரிங், புதிய மாடலில் எஞ்சின் கவர், ஒவ்வொரு தூண் கம்பிக்கும் SOS உதவி பட்டன் வழங்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications