New Low Pressure: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது! சென்னைக்கு திரும்பும் மழை.. 17ம் தேதி சம்பவம் இருக்கு
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி (low pressure) உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், இதனால் வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சென்னை உள்பட தமிழகம் முழுக்க கனமழை வெளுக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார். ஒரு சில இடங்களில் 12 செண்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இன்றும் நெல்லை, தென்காசியில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இன்று இரவும் தென்காசி மாவட்டத்தில் கடையம், ஆலங்குளம், பொட்டல்புதூர் பகுதியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. பருவமழையை பொருத்தவரையில் கடந்த மாதம் இயல்புக்கு அதிகமாகவே மழை பெய்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் சற்று மழை குறைந்து இருந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுக்க
குறிப்பாக நாளை சனிக்கிழமை இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் வழியாக லட்சத்தீவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வரும் 16 ஆம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை தொடங்கும். இதனையடுத்து வரும் 17, 18 ஆம் தேதிகளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து 20 ஆம் தேதி வரை மழையானது பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நாட்களில் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
12 செமீ மழை பெய்யும்
17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழையை எதிர்பார்க்கலாம். ஒரு சில இடங்களில் மிக கனமழை கூட பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது 12 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
புயல் உருவாகக் கூடும்
அதற்கு பிறகும் அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதில் புயல் கூட உருவாக சான்ஸ் இருக்கிறது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது.
புயல் உருவானால் அது வட தமிழகத்தில் கரையை கடக்குமா? அல்லது காவிரி டெல்டா பகுதியில் கரையை கடக்குமா? என்பது அதன் நகர்வை பொறுத்து தான் பின்னர் தெரியவரும். இந்த புயலால் நல்ல மழைப்பொழிவு தான் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications