ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா?
சென்னை: பான் கார்டு விதிகளில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ள நிலையில் அவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மாதந்தோறும் பான் கார்டு, கேஸ் சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு, சுங்கக் கட்டணம் உள்ளிட்டவைகளில் விதிகள், விலையில் மாற்றங்கள் நிகழும். அந்த வகையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி பான் கார்டு விவகாரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல்
இதுவரை ஒரு நாளைக்கு ரூ 50 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ மட்டுமே பான் கார்டு தேவைப்பட்டது. ஆனால் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு பணத்தை வரவு வைப்பதோ அல்லது எடுப்பதோ ரூ 10 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவை.
வாகனங்கள் வாங்க
இதுவரை எந்த ஒரு இரு சக்கரம், மூன்று சக்கரம், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை வாங்கினாலே பான் கார்டு கட்டாயமாக சமர்ப்பித்தல் வேண்டும். ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வாகனத்தின் மதிப்பு ரூ 5 லட்சத்திற்கு மேல் சென்றால் மட்டுமே பான் கார்டு தேவை.
இன்சூரன்ஸ் பாலிசி
மார்ச் 31 ஆம் தேதி வரை காப்பீடு ப்ரீமியத் தொகை ஆண்டுக்கு ரூ 50 ஆயிரத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவைப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ப்ரீமியத் தொகை எவ்வளவு இருந்தாலும் சரி இன்சூரன்ஸ் போட பான் நம்பர் கட்டாயம் தேவைப்படுகிறது.
சொத்துக்களை வாங்கும் போது
இதுவரை சொத்துகளை வாங்கும் போதும் விற்கும் போதும் அதன் மதிப்பு ரூ 10 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கட்டாயம் என்றிருக்கிறது. ஆனால் வரும் 1 ஆம் தேதி முதல் சொத்து மதிப்பு 20 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவைப்படும்.
உணவக பில்
இதுவரை உணவகங்கள், ரெஸ்டாரன்ட்களில் 50 ஆயிரத்திற்கு மேல் பணம் பெறும் போது பான்கார்டு தேவைப்பட்டது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அது ஒரு லட்சமாக உயர்த்தப்படுகிறது.
புதிய பான் கார்டு பெறுவது எப்படி?
புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது இப்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவே இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்.
உடனடி இ-பான் (Instant e-PAN) - இலவசம்- உங்களிடம் ஆதார் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால், 10 நிமிடங்களில் டிஜிட்டல் பான் கார்டைப் பெறலாம்.
இணையதளம்: Income Tax e-Filing Portal
நடைமுறை: 'Instant e-PAN' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். மொபைலுக்கு வரும் OTP-யை உள்ளிட்டால் உடனடியாக இ-பான் தயாராகிவிடும்.
கட்டணம்: இதற்கு கட்டணம் கிடையாது. இது டிஜிட்டல் நகலாக மட்டுமே கிடைக்கும் (பிளாஸ்டிக் கார்டு தேவைப்பட்டால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்).
பிளாஸ்டிக் பான் கார்டு (Physical PAN Card) - கட்டணத்துடன்
உங்களுக்கு தபால் மூலம் பிளாஸ்டிக் கார்டு வர வேண்டும் என்றால், NSDL (Protean) அல்லது UTIITSL தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
அடையாளச் சான்று: ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம்.
முகவரிச் சான்று: ஆதார் கார்டு, மின்சாரப் பட்டியல் அல்லது வங்கி கணக்கு புத்தகம்.
பிறந்த தேதி சான்று: பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
புகைப்படம்: இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (ஆன்லைனில் ஆதார் மூலம் செய்தால் இது தேவையில்லை).
விண்ணப்பிக்கும் முறை
NSDL இணையதளத்திற்குச் செல்லவும்.
'Apply Online' என்பதில் 'New PAN - Indian Citizen (Form 49A)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தனிப்பட்ட விவரங்களை (பெயர், பிறந்த தேதி, மொபைல் எண்) பூர்த்தி செய்யவும்.
கட்டணம்: இந்திய முகவரிக்கு சுமார் ரூ.107 செலுத்த வேண்டும்.
விண்ணப்பித்தவுடன் ஒரு 'Acknowledgement Number' கிடைக்கும். இதை வைத்து உங்கள் கார்டு எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
நீங்கள் கவனிக்க வேண்டியவை:
உங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்களும் (பெயர், பிறந்த தேதி), நீங்கள் விண்ணப்பத்தில் கொடுக்கும் விவரங்களும் சரியாக ஒன்றாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே உங்களிடம் பான் கார்டு இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்; அது சட்டப்படி தவறு.












Click it and Unblock the Notifications