ரேஷன் கடைகள்.. பல கிராமங்களுக்கு இது நல்ல செய்தி.. அமைச்சர் பெரிய கருப்பன் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 35,323 ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் தற்போது எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதி இருக்கிறது. உதாரணமாக மதுரையில் உள்ளவர்கள் சென்னையில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கி கொள்ள முடியும். இதற்காக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விரல் ரேகைப் பதிவு பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, தற்போது கண் கருவிழிப் பதிவையும் பயன்படுத்தி, பொருட்களை வழங்கும் நடைமுறையும் பயன்பாட்டில் இருக்கிறது.
தமிழகத்தில் 33,238 கடைகள் கூட்டுறவுத் துறை மூலமும், மற்ற கடைகள் உணவுத் துறை வாயிலாகவும் நடத்தப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்களுடன், சில மளிகைப்பொருட்கள், சோப்பு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
நகர்புறங்களை பொறுத்தவரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரேஷன் கடைகள் இருக்கும். கிராமப்புறங்களில் சில கிமீ தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்கும். மலை கிராமங்கள் அல்லது மக்கள் தொகை மிக குறைவாக உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் அந்த பகுதியில் உள்ள பெரிய ஊருக்கு போய் ரேஷனில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.
இந்நிலையில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருக்கிறார்.
முன்னதாக சட்டசபையில் நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், "திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. கடைசியாக 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 9 ஆயிரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் இருக்கிறது. மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.
முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளில் இருந்து 15 லட்சத்து 5 ஆயிரத்து 45 ரேஷன் அட்டைகள் முன்னுரிமையுள்ள ரேஷன் அட்டைகளாக மாற்றப்பட்டு உள்ளன. இதனால், 48 லட்சத்து 91 ஆயிரத்து 394 பேர் பயன்பெற்றுள்ளார்கள்..
கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் இதுவரை 699 முழுநேர ரேஷன் கடைகளும், 1310 பகுதிநேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 2009 ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 3191 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்காக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் தற்போது 9 ஆயிரத்து 182 ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 59,852 கிலோ லிட்டராக இருந்த நிலையில் இந்த ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,536 கிலோ லிட்டராகக் குறைக்கப்பட்டு 2,802 கிலோ லிட்டர் வரை மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டு தற்போது 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1,084 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மண்எண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம்.
இது தொடர்புடைய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், நம் மாநிலத்தில் கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் அதிகம் உள்ளதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். வால்பாறை, நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் மண்ணெண்ணெய்யின் தேவையைக் கூறி தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம்.
தி மு க ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 22 லட்சத்து 97 ஆயிரத்து 343 விவசாயிகளிடம் இருந்து ஒரு கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 778 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ,28 ஆயிரத்து 245 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டு அளவினை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications