ஜெட் வேக கொரோனா.. சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலம்.. எச்சரிக்கும் தமிழக அரசு
சென்னை: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் தென்படும்போது மருத்துவமனைக்குச் சென்று தொடக்கத்திலேயே பரிசோதனை செய்துக் கொண்டால் உயிரிழப்புகளை தடுப்பதோடு மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதையும் தவிர்க்க முடியும்.
10 லட்சம்
சென்னையில் தடுப்பூசி செலுத்த வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள 10 நாட்களில் அனைவருக்குமே தடுப்பூசி செலுத்திவிட முடியும். எனவே முடிந்தவரை 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.
காய்ச்சல்
சென்னையில் ஒரே பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தால், குறைந்தது 50 பேர் மாநகராட்சி அலுவலர்களை அணுகினால், அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தடுப்பூசி முகாம்கள் ஒருங்கிணைக்கப்படும். வீடுகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொரோனா விதிமீறல்கள்
சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும். கொரோனா விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிப்பது வருவாயை பெருக்க இல்லை. மக்களிடையே விழிப்புணர்வையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வருவதற்காகத்தான். கொரோனாவை முழுமையாக முடக்க முடியாது.
மீன் மார்க்கெட்
காசிமேடு மீன் மார்க்கெட்டில் விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் கூடுகிறது. அந்த பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது சவாலான காரியமாக உள்ளது. இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் பிரகாஷ்.