வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ.13 இல் உருவாகிறது
சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே வரும் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரவலாக மழை
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

தனித்தீவு
பெரும்பாலான கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. சென்னையில் பெரும்பாலான இடங்களில் உள்ள சாலைகள் ஏரி போல் காணப்படுகின்றன. நிரம்பி வழியும் முக்கிய ஏரிகள், ஆறுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது.
Recommended Video

தெற்கு அந்தமான்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். இது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும். இது வலுப்பெறுமா இல்லை, கடலிலேயே வலுவிழக்குமா என்பதை சென்னை வானிலை ஆய்வாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அச்சம்
இது போல் அடுத்தடுத்து புதிய காற்றழுத்தங்கள் உருவாவது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது. ஏற்கெனவே கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் தற்போது புதிய காற்றழுத்தத்தால் மேலும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அத்தியாவசிய பொருட்களையும் உலர் உணவு பொருட்களையும் தற்போதே வாங்கி வைத்துக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications