ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடப் போறீங்களா.. காவல்துறை விதிகளை கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள போலீசார், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக 20,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். 2026ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில், எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் கடற்கரை, வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று மாலை முதல் நாளை வரை பொதுமக்கள் கடலில் குளிக்கவோ, இறங்கி விளையாடவோ அனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டையொட்டி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மது அருந்தும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்ககூடாது, கேளிக்கை விடுதிகளில் இரவு 1 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, நீச்சல் குளங்கள் அருகே போதிய பாதுகாவலர்கள் நியமனம் உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவு செய்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் போதை நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் சிக்குபவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
அதேபோல் வாண வேடிக்கைகள், பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. வாகனங்களை சாலைகளில் நிறுத்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, தீ தடுப்பான உபகரணங்கள், மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் ஆகியவை தயாராக இருக்க வேண்டும் என்றும், விதிகளை மீறும் நட்சத்திர விடுதிகளில் நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications