இவரால் தமிழகத்திற்கே கேடு.. பாஜகவை அழிக்கிறார்! பெயரையே குறிப்பிடாமல் யாரை சொல்கிறார் நிர்மல்குமார்?
தமிழக பாஜக தலைமையின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்த நிர்மல் குமார்
சென்னை: தமிழக திராவிட மாடல் அமைச்சர்களைவிட பயங்கரமாக நடிக்கும் இவரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல , தமிழகத்திற்கே கேடு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இதுவரை பலர் இருந்துவிட்டார்கள். தமிழிசை, முருகன் உள்ளிட்டோர் தமிழக பாஜக தலைவராக இருந்த போது பெரும்பாலும் கட்சியை விட்டு யாரும் விலகியதில்லை என்றே சொல்லலாம். அப்படியே போயிருந்தாலும் பிரபலமானவர்கள், மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள் விலகியிருக்க மாட்டார்கள்.
அது போல் யாரும் தலைமையை பழித்திருக்க மாட்டார்கள். ஆனால் பாஜகவிலிருந்து அண்மையில் விலகிய மதுரை டாக்டர் சரவணனாகட்டும், காயத்ரி ரகுராம் ஆகட்டும், தற்போது நிர்மல் குமார் என தமிழக பாஜக தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவிட்டே சென்றுள்ளனர்.

தமிழக ராணுவ வீரர்
தமிழக ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது தமிழக பாஜகவினர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசினர். இதை கண்டித்த சரவணன் அன்றிரவே பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கோரினார். பிறகு பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். செருப்பு வீச்சை தூண்டிவிட்டவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார்.

காயத்ரி ரகுராம்
அது போல் காயத்ரி ரகுராமும் கட்சியில் இருந்து 6 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் அண்ணாமலை மீது விமர்சனங்களையும் முன் வைத்தார். பின்னர் கட்சியிலிருந்து அவரே விலகினார். அதன் பின்னர் அண்ணாமலை சொந்த கட்சியினரை விமர்சிக்கவே வார் ரூம் நடத்தி வருவதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நிர்மல் குமார்
இந்த நிலையில் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் அவரை நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்! விடை பெறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் ஒரு கடிதத்தையும் அவர் இணைத்துள்ளார்.

ராஜினாமா
அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல நூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன். இன்று விடை பெறுகிறேன்.

நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி
என் மீது நம்பிககை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காமல் சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

வியாபாரம்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்ததுதான் மிச்சம். குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பாரக்க முடிகிறது.

20 சதவீதம் கூட இல்லை
2019 ஆம் ஆண்டு இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

கடும் விமர்சனத்தை முன் வைத்த நிர்மல் குமார்
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல , தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? உங்கள் சகோதரன் சி.டி.ஆர் நிர்மல் குமார் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications