புரட்டி எடுக்கும் நிவர்: ஒரு பக்கம் மழை...மறுபக்கம் வெள்ளம் - இருளில் தவிக்கும் மக்கள்
நிவர் புயல் தாக்கத்தினால் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, புறநகர் பகுதிகளிலும், புயலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத
சென்னை: நிவர் புயலின் தாக்கத்தினால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மழை, வெள்ளத்திற்கு இடையே லட்சக்கணக்கான மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் ஏரி போல தேங்கியுள்ளது.

கனமழை காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்திருக்கிறது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்துள்ளது. சென்னையில் பலத்த காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு உள்ளது.
புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் கனமழை பெய்து வருவதோடு வெள்ளநீரின் அளவும் அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் மழை மறுபக்கம் வெள்ளம் கூடவே இருளும் சூழ்ந்துள்ளதால் பலரும் தவித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 7000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

புயல் புதுச்சேரிக்கு அருகில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காரைக்கால் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால் காற்றின் வேகமும் மழையின் தீவிரமும் அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு நிகழ்ந்தது போது இப்போது வெள்ளம் வருமே என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் சென்னைவாசிகள்.












Click it and Unblock the Notifications