சீமானின் 'ஒத்த' வார்த்தை.. '15' பெர்சன்ட்.. தம்பிகள் 'ஏக' குஷி.. 'சவுண்டு' பலமா இருக்குமாம்
சென்னை: மற்றவர்களை முதல்வராக்க நான் அரசியலுக்கு வரவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
களம் எப்படி இருக்குது என்பது முக்கியமல்ல.. சண்ட செய்யணும்.. தைரியமா சண்ட செய்யணும் என்பதே சீமானின் கோட்பாடு. அப்படித் தான் கட்சியையும் வழிநடத்தி வருகிறார்.
தேர்தலில் இதுவரை அவர் தீர்மானிக்கும் சக்தியாக இல்லாவிட்டாலும், கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் அரசியல் தலைவர் என்ற புரமோஷனை அவர் எப்போதோ அடைந்துவிட்டார்.
நோ கூட்டணி
இந்த நிலையில், எதிர்வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. 'எதிர்க்கட்சி' எனும் அந்தஸ்து வரை முன்னேறிய விஜயகாந்தின் தேமுதிகவே, இன்று 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட முடியாமல், தனது ஜுனியர் கட்சியான அமமுகவில் ஐக்கியமாகி 60 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் நிலையில், கூட்டணியே வைக்காமல் தனித்து களம் காண்கிறது நாம் தமிழர் கட்சி.
கூட்டணிக்கு காரணம்?
தனித்து நிற்பதோடு மட்டுமில்லாமல், வேட்பாளர்களில் சரிபாதி இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி அனைவரது கவனத்தையும் அக்கட்சி ஈர்த்துள்ளது. ஆனால், தேர்தலில் 'வெற்றி' என்பதே ஹீரோ. அங்கு, நீங்கள் என்னதான் 'ஆஸ்கார்' வாங்கும் அளவுக்கு கூட பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தாலும், இறுதியில் ஹீரோ ஜெயிக்கவில்லை எனில் படம் ஃபிளாப் ஆகிவிடும். சிறிய கட்சிகள் கூட்டணியை நோக்கி செல்வது என்பது வெற்றியை முடிந்தளவு உறுதி செய்வதற்காகத் தான். அந்த சிறிய கட்சிகளுக்கு என்று தனியாக வாக்கு வங்கி இருக்கும் நிலையிலும், கூட்டணி வைப்பதற்கு இதுதான் காரணம்.
அக்கட்சி நிலை என்ன?
இந்த நிலையில், சமீபத்தில் சீமான் அளித்த பேட்டியில், தான் ஏன் கூட்டணி வைக்கவில்லை? என்பது குறித்து பேசியுள்ளார். அதில், 'வைகோ, திருமாவளவன் போன்று ஏற்கனவே தங்களை நிரூபித்தவர்கள் கூட்டணி வைத்ததால் தான் இன்று தங்களது தனித்தன்மையை இழந்து நிற்கிறார்கள். விஜயகாந்த் 10 சதவிகிதம் வரை வாக்கு வங்கி பெற்றவர். இன்று அக்கட்சியின் நிலை என்ன? நான், பலம் பொருந்திய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தால் என் சுயத்தையும் சுதந்திரத்தையும் இழப்பேன்.
அதுவே பெருமை
தவிர, 'நான் சுத்தமானவன், தூய்மையானவன்.. எனக்கு ஓட்டு போடுங்கள்' என்று தான் மக்களிடம் சொல்லி ஆதரவு கேட்க முடியுமே தவிர, 'இவர் நல்லவர். இவருக்கு ஓட்டு போடுங்க.. இவரை முதல்வர் ஆக்குங்க' என்று சொல்லவா நான் பொதுவாழ்க்கைக்கு வந்தேன்? என்னை எத்தனையோ கட்சிகள் அழைத்தன. நான் தான் செல்லவில்லை. வெற்றியோ, தோல்வியோ தனித்து போட்டியிடுவதே எங்களுக்கு பெருமை. வரும் தேர்தலில் நிச்சயம் 15 சதவிகித வாக்குகளை கைப்பற்றுவோம் என்று எப்போதோ மக்கள் எங்களுக்கு உணர்த்திவிட்டார்கள்" என்று முடித்தார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.86 வாக்கு சதவிகிதத்தை பெற்றது. இது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெற்ற 3.66 வாக்கு சதவிகிதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டப்பேரவை தேர்தல் என்ன தலையெழுத்தை எழுத காத்திருக்கிறதோ..! பார்ப்போம்.