சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்!
சென்னை: எடப்பாடி சட்டசபை தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் நிறுத்திய அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், எடப்பாடி பழனிசாமியை துரோகி என கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் தோல்வியடைவார் என சவால் விட்டிருந்தார். தற்போது அந்த தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் ஸ்டார் தொகுதியான எடப்பாடியில் நேற்று வேட்பு மனு பரிசீலனையின்போது அதிரடி திருப்பங்கள் அரங்கேறின. நடிகர் விஜய் தலைமையிலான தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அருண்குமார். ஒருவேளை அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளராக நித்யா என்பவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இருவரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
அருண்குமாரின் மனுவை முன்மொழிந்தவர்களைத் தேர்தல் அதிகாரிகளால் முறைப்படி உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது வேட்பு மனுவில் இருந்த சில தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக இந்தத் தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டிருந்த தவெக, தற்போது 233 தொகுதிகளில் மட்டுமே களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.
மனு நிராகரிக்கப்பட்ட செய்தி வெளியான சமயத்தில், வேட்பாளர் அருண்குமாரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள் மற்றும் அருண்குமாரின் ஆதரவாளர்கள் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எங்கள் வேட்பாளர் அருண்குமாரைக் காணவில்லை, யாரோ அவரை கடத்திவிட்டார்கள் எனப் புகார் கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றபோது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தவெக சார்பில் முதன்மை வேட்பாளர் அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டதுடன், மாற்று வேட்பாளர் நித்யாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நேரடியாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டிருந்த விஜய்க்கு இது பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தவெக போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தற்போது அதிமுக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தமிழகத்தின் முக்கிய அரசியல் மையங்களில் ஒன்றாக கருதப்படும் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது, தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் நிறுத்திய அருண் குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம், எடப்பாடி பழனிசாமியை அரசியல் எதிரி, துரோகி என கடுமையாக விமர்சனம் செய்து வரும் அவர், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் தோல்வியடைவார் என சவால் விட்டிருந்தார்.
தவெக ஆட்சி அமைப்பதைத் யாராலும் தடுக்க முடியாது. அது உறுதியாக நடக்கும். எடப்பாடி பழனிசாமி களம் காண முடியுமா என்பதை பார்ப்பீர்கள் என்றும், அவர் தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார். தற்போது அந்த தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications