சந்தேகமே வேண்டாம்.. பாஜகவுடன் எந்த சமரசமும் இல்லை.. காங். கூட்டணி தொடரும்.. ஸ்டாலின் திட்டவட்டம்!
சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடரும் என்பதை முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக திமுக - பாஜக நெருங்கி போவதாக பல்வேறு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக நடந்து வந்தன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறக்க முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை திமுக அழைத்ததில் இருந்தே இந்த விவாதம் நடந்து வந்தது.
பின்னர் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் மோடி - ஸ்டாலின் இருவரும் நெருக்கமான சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக இரண்டு கட்சிகளும் நெருங்கி போவதாக விவாதங்கள் எழுந்தன.

கூட்டணி
இதனால் இரண்டு கட்சிகளும் லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க போகிறதா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில்தான், விசிக தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. எங்கள் கொள்கை அறிவாலயத்தில் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆட்சியிலும் இருக்கும். நாங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

சமரசம்
பாஜகவுடன் சிறிய சமரசத்தை கூட நாங்கள் செய்து கொள்ள மாட்டோம். நான் கட்சித் தலைவர்.. மாநில முதல்வர் என்ற இரண்டு பொறுப்பில் இருக்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த நிலையில் இன்று நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் இதை ஸ்டாலின் உறுதிப்படுத்தினார். முதல்வரான பின்னர் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். இதில் 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் பற்றி அவர் பேசினார்.

கூட்டணி
முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்வியில் .. "அகில இந்திய அளவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் என்று பலரும் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பங்கு என்னவாக இருக்கும்? தேசிய அளவில் பிரதமரை தீர்மானிக்க போகும் சக்தியாக திமுக இருக்க போகிறதா? எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் இடத்தில் திமுக இருக்க போகிறதா? கலைஞரை கிங் மேக்கர் என்று அழைத்த காலம் உண்டு.. நீங்களும் அதே திட்டத்தில் இருக்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டது.

பதில்
முதல்வர் ஸ்டாலின் இதற்கு அளித்த பதிலில், கலைஞர் அப்போதே என்னுடைய உயரம் எனக்கு தெரியும் என்று கூறினார். அதேபோல்தான் என்னுடைய உயரம் எனக்கு தெரியும். அந்த சூழ்நிலையில்தான் என்னுடைய அரசியலை நான் நடத்திக்கொண்டு இருக்கிறேன். பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜகவிற்கு எதிராக இருக்கும் முதல்வர்கள் அடிக்கடி என்னுடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள். அவர்கள் சில விஷயங்களை என்னிடம் பேசுவார்கள். அந்த அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் இங்கே அமைத்து இருக்கும் கூட்டணியை வலுப்படுத்துவோம். எப்படி சென்ற தேர்தலில், அதற்கு முந்தைய தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றோமோ அப்படி வெற்றிபெறுவோம். முப்பெரும் விழாவில் சொன்னது போல 40க்கு 40 என்று இலக்கு நிர்ணயம் செய்து செயல்படுகிறோம். அதன்பின் தேசிய அளவில் இருக்கும் நிலவரத்தை பொறுத்து எங்கள் செயல்பாடு இருக்கும். திமுகவின் தமிழ்நாடு கூட்டணி தொடரும்.

கூட்டணி
இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல . இது கொள்கைக்கான கூட்டணி. இந்த கூட்டணி தொடரும். தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். கடந்த சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்திற்காக சேலத்திற்கு ராகுல் காந்தி வந்து இருந்தார். அப்போது திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றோம். அதேபோல் இந்தியா முழுமைக்கும் செயல்பட வேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று கூறினேன். அதைத்தான் மீண்டும் வலியுறுத்துகிறேன், வற்புறுத்துகிறேன்.

மாநில கட்சிகள்
எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும். தனி தனியாக போனால் தேர்தல் வெற்றியை பாதிக்கும். பாஜகவுடன் எந்த சமரசமும் இல்லை. அதில் உங்களுக்கு என்ன சந்தேகம். சந்தேகம் கொள்வதற்கு எதுவும் இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் பாஜகவுடன் கூட்டணி இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடரும் என்பதை முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications