“பொதுமக்கள் அச்சப்படவோ.. பதற்றம் கொள்ளவோ வேண்டாம்".. எரிபொருள் தட்டுப்பாடா? முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
சென்னை: "போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கக் கோரி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரம் இந்தியா முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களை புக் செய்வதிலும் சிக்கல் நிகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது நாடு முழுவதும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications