விஜய்க்கு எதிராக.. அதிமுகவுடன் பேச்சுவார்த்தையா? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை! உடைத்து பேசிய திமுக
சென்னை: தனிப்பெரும்பான்மை இல்லாமல் விஜய் ஆட்சி அமைக்க போராடி வருகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்று பேச்சுக்கள் அடிப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

எனவே காங்கிரஸின் உதவியை தவெக நாடியது. காங்கிரஸும் இந்த வாய்ப்புக்காத்தான் காத்திருந்ததைபோல.. உடனே ஓகே சொல்லி 5 எம்எல்ஏக்களின் ஆதரவையும் தெரிவித்தது. தற்போது தவெக கூட்டணியின் பலம் 113 என இருக்கிறது. விஜய் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, 112 என்றுதான் பலம் இருக்கிறது. இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவை.
விசிக 2, சிபிஐ 2, சிபிஎம் 2 என மொத்தம் 6 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் விஜய்க்கு ஆதரவு தருவது தொடர்பாக பாசிட்டிவாக எதையும் சொல்லவில்லை. எனவே விஜய் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, திமுக மற்றும் அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என மூத்த பத்திரிகையாளர்கள் பேசி வருகின்றனர். திமுக தரப்பிலிருந்து இது குறித்து அதிமுகவிடம் பேசி வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதனை திமுக முற்றிலுமாக மறுத்துள்ளது.
திமுக செய்தித் தொடர்பாளர் ஏ. சரவணன் இது குறித்து கூறுகையில், "அதிமுகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என தெளிவுப்படுத்தியிருக்கிறார். மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட திமுக விரும்பவில்லை என்றும், எதிர்க்கட்சியாக செயல்பட தயாராகி வருகிறது என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications