வடசென்னை கல்வெட்டு ரவி பாஜகவில் ஐக்கியம்- மறக்க கூடியதா ரவியின் அந்த ரத்த சரித்திரம்?
சென்னை: வடசென்னையை கலக்கிய மாஜி ரவுடி கல்வெட்டு ரவி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
வடசென்னையில் பிரபல ரவுடி மாலைக்கண் செல்வம் கோஷ்டியில் இருந்தவர் கல்வெட்டு ரவி. இவர் மீது 6 முறை குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி அண்மைக்காலமாக ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.
அப்போது பேசிய கரு. நாகராஜன், ரவிஷங்கர் என்ற கல்வெட்டு ரவி வடசென்னையில் மீன்பிடி படகுகள் வைத்திருக்கிறார். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். வடசென்னையில் இளைஞர் பட்டாளத்தை தமக்கு பின்னால் வைத்திருக்கக் கூடியவர் என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய கல்வெட்டு ரவி, தாம் திருந்தி வாழ்வதாகவும் அதனால் பாஜகவில் இணைந்திருப்பதாகவும் கூறினார்.

கல்வெட்டு ரவி யார்?
சென்னையில் போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் பங்க் குமார், ஆசைத்தம்பி, மிலிட்ரி குமார், வெங்கடேச பண்ணையார், அயோத்திகுப்பம் வீரமணி, மணல் மேடு சங்கர், குரங்கு செந்தில், வெள்ளை ரவி. இந்த பட்டியலில் தம்மையும் சேர்த்துவிடுவார்கள் என அச்சப்பட்டவர்தான் கல்வெட்டு ரவி.

தனி ராஜ்ஜியம்
என்கவுண்ட்டரில் கல்வெட்டு ரவி குறி வைக்கப்பட சொல்லப்படும் காரணங்கள் ஒன்றா இரண்டா.. 6 கொலை வழக்குகள் உட்பட 35 வழக்குகள்... மொத்தம் 6 முறை பாய்ந்திருக்கிறது குண்டர் சட்டம்! சென்னையில் ஒருகாலத்தில் கலக்கிய மாலைக்கண் ரவியின் வலது கையாக இயங்கியவர் கல்வெட்டு ரவி. ரவியின் தனி ராஜ்ஜியம் எஸ்பிளனேடு நித்தியானந்தை போட்டுத் தள்ளியதில்தான் இருந்து பிரபலம்.

ரவியின் ஹிட்லிஸ்ட்
அதுவும் எஸ்பிளனேடு நித்தியை பாரிமுனை ஹோட்டலில் வைத்து கல்வெட்டு ரவி முடித்த கதைதான் எல்லோரையும் திகிலடைய வைத்தது. இதற்குப் பிறகுதான் கல்வெட்டு ரவியின் கைகளும் ஓங்கியது. கேளம்பாக்கத்தில் கன்னியப்பன், தண்டையார்பேட்டையில் வீனஸ், ராயபுரத்தில் பிரான்சிஸ், பொக்கை ரவி, வண்ணாரப்பேட்டை சண்முகம்.. இவர்கள் எல்லாம் கல்வெட்டு ரவியால் கதை முடிக்கப்பட்டவர்கள்.

நடுக்கடல் மிரட்டல்கள்
அதுவும் நடுக்கடலில் பிரபலங்களுக்காக நடக்கும் மிரட்டல்கள், பஞ்சாயத்துகளில் கல்வெட்டு ரவி கதிகலக்கியவர் என்ற பெயரும் உண்டு. அப்படி நடுக்கடலுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் சித்ரவதை செய்தே காரியம் சாதிப்பது ரவியின் ஸ்டைலாம்.

இப்போது அரசியல் பிரமுகர்
கல்வெட்டு ரவிக்கு போலீஸ் காப்பு கட்டி சிறையில் போட்டாலும் அங்கிருந்தே கனகச்சிதமாக காரியங்களை செய்து வந்திருக்கிறார் ரவி. இதனால்தான் போலீசாரின் ஹிட் லிஸ்டில் இருந்து வந்தார் கல்வெட்டு ரவி. இப்போது வடசென்னையில் அரசியல் பிரமுகராக அரிதாரம் பூசிவிட்டார் கல்வெட்டு ரவி. இனி என்கவுண்ட்டர் பயம் அண்ணனுக்கு இல்லை என்கின்றனர் அவரது அடிப்பொடிகள்.












Click it and Unblock the Notifications