வயிற்றில் அடித்த வடகிழக்கு பருவமழை! 3 நாள் வியாபாரம் தான் 1 வருட வருமானமே! புலம்பும் வியாபாரிகள்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையோரம் கடைகள் அமைத்திருக்கும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே மாநகராட்சி காவல்துறை உள்ளிட்ட அவற்றின் கெடுபிடியால் கடை அமைக்க முடியாமல் தவிப்பதாகவும், தற்போது மழையும் தொடங்கி இருப்பதால் இந்த ஆண்டு நஷ்டத்தை சந்திக்க இருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இறுதி கட்ட கொள்முதலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி என்றாலே இனிப்பு, பட்டாசுகள் மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டுக்கு தேவையான மொத்தமான வீட்டு உபயோக பொருட்களை வாங்குவது வழக்கம்.
டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமல்லாது, அதிக அளவில் சிறிய பொருட்களை தான் குடும்பத் தலைவிகள் வாங்குவார்கள். இதற்காக பெரிய பெரிய கடைகளுக்கு அவர்கள் செல்வது கிடையாது. சாலையோரங்களில் இருகும் தற்காலிக கடைகள் தான் இவர்களின் ஷோரூம்கள்.

தீபாவளி விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகரங்களில் முக்கியசாலை சந்திப்புகள், கடைவீதிகளில் சிறு வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வார்கள். அவர்களிடம் தான் மக்கள் அதிகம் பொருட்களை வாங்குவார்கள். வெறும் மூன்று நாள் வியாபாரம் தான் அவர்களது ஒரு வருட வருமானமே. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சிறு வியாபாரிகள்
குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையோரம் கடை வைத்துள்ள வியாபாரிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு மேலாக மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கடன் வாங்கி பொருட்களை கொள்முதல் செய்திருக்கும் நிலையில் மூன்று நாள் வியாபாரம் நடந்தால் தான் கடனையும் அடைக்க முடியும் தங்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை
சில ஊர்களில் சந்தை இருக்கும் நிலையில் பெரும்பாலான நகரங்களில் தீபாவளி விற்பனைக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்படுவது கிடையாது. எனவே நகருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் உரிய மழை நீர் பாதுகாப்பு மற்றும் வசதிகளுடன் தற்காலிக சந்தைகள் அமைக்க இடம் கொடுத்தால் வியாபாரிகள் நலன் பாதுகாக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
தற்காலிக கடைகள்
சென்னையில் தியாகராய நகர், கோவையில் ஒப்பணக்கார வீதி, மதுரையில் மேலமாசி வீதி, கீழமாசி வீதி, திண்டுக்கல்லில் பெரிய கடை வீதி என முக்கிய நகரங்களில் இது போன்ற தற்காலிக தீபாவளிக்கடைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் கடைகள் அமைக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகங்களும் காவல்துறையினரும் கெடுபிடி காட்டி வருகின்றனர். பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுவார்கள் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அதே நேரத்தில் மேற்கூறியவாறு ஊருக்கு ஒதுக்கு புறமான அல்லது நகரின் மையப் பகுதிகளில் இருக்கும் மைதானங்கள் உள்ளிட்டவற்றில் தற்காலிகமாக கடைகள் ஒதுக்கினால் பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்க மாட்டார்கள், வியாபாரிகளுக்கும் எந்தவித நெருக்கடியும் ஏற்படாது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications