எல்லாம் ‘உல்டா’.. ஆளுநர் அப்படி பேச.. திரும்பிப் பார்த்தா அரசுப் பள்ளியில் இருந்து ஒருவர் கூட இல்லை!
சென்னை: ஆளுநர் ரவி, அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகமானோர் நீட் தேர்வு மூலம் மருத்துவ சீட் பெற்றுள்ளதாகப் பேசினார். ஆனால், அதிக மதிப்பெண் பெற்ற நீட் மாணவர்களுடனான கலந்துரையாடலில் ஒருவர் கூட அரசுப் பள்ளி மாணவர் இல்லை. இதன் மூலமே ஆளுநர் பேசியது எவ்வளவு முரண்பாடாக உள்ளது அம்பலமாகியுள்ளது என்கிறார்கள் பொதுமக்கள்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் அவ்வப்போது ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், ஆளுநருடன் நேற்று கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவியின் தந்தை ஒருவர், "தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழ்நாடு அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளிக்கும்போது, "நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒருபோதும் நான் கையெழுத்துப் போட மாட்டேன்" எனத் தெரிவித்தார்.
மேலும், "நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. நூற்றுக்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பை படித்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு தான், அதிகளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர்" என்று பேசினார் ஆளுநர் ரவி.
ஆனால், ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒருவர் கூட கலந்துகொள்ளவில்லை. காரணம், நீட் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாட்டில், அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் அதிகம் பெற்ற மதிப்பெண்களே 569 தான். எனவே, இந்த நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களோ, அவர்களது பெற்றோர்களோ யாருமே பங்கேற்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தான், அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகமான மருத்துவ சீட்களைப் பெற்றுள்ளனர் என்று பேசியுள்ளார் ஆளுநர் ரவி.












Click it and Unblock the Notifications