தமிழ்நாடு இருக்கட்டும்! உ.பி, குஜராத், ஆந்திராவை விரட்டும் மின்தடை! 12 மாநிலங்களுக்கு பறந்த வார்னிங்
சென்னை: நேற்று தமிழ்நாட்டில் மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளானார்கள். அதே சமயம் குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக மின்தடை ஏற்பட்டு உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் நேற்று பல மாவட்டங்களில் 2-3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. திடீரென மின்சாரம் இரண்டு - மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
நேற்று மின்தடைக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்படாமல் போனதே காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கொடுத்த விளக்கத்தில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது என்றுள்ளார்.
2-3 மணி நேரம்.. பல இடங்களில் மின்தடை.. நேற்றிரவு என்ன நடந்தது தமிழ்நாட்டில்? இதுதான் பின்னணி காரணம்!
விளக்கம் என்ன?
மேலும் அவர் தனது விளக்கத்தில், மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தடைபட்ட காரணத்தால் சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று குறிப்பிட்டார்.
விவாதம்
தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் மின்சாரம் தடைபட்ட நிலையில் அது பெரிய அளவில் விவாதம் ஆனது. அதே சமயம் வடஇந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் 600 மெகாவாட் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு உள்ளது. இதை சமாளிக்க அங்கு தொழிற்சாலைகளை வாரத்தில் ஒருநாள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்
உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசத்திலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆல் இந்தியா பவர் எஞ்சினியர் பெடரேஷன் தலைவர் சைலேந்திர துபே தெரிவித்துள்ளார். போதிய நிலக்கரி இல்லாத காரணத்தால் நிலக்கரி மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 12 மாநிலங்களில் மின் தடை வரும் நாட்களில் ஏற்படும்.
எங்கு மின்தடை
2021 அக்டோபர் மாதத்திற்கு பின் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது வீட்டு மின் தேவை 38 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது. ஆனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2021ல் மின் தட்டுப்பாடு 1.1 சதவிகிதம் என்று இருந்தது. இந்த ஏப்ரல் மாதம் இது 1.4 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதன்படி ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார், தெலுங்கானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான மின் தடை ஏற்பட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மோசமான நிலை
அதிலும் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மின் தடை அதிகமாக இருக்கும். அங்கு மின் தடை அளவு 3 - 8.7 சதவிகிதமாக இருக்கும். இதற்கு சட்டென மாற்று கண்டுபிடிக்க வேண்டும். உடனடியாக நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் மின் தேவை ஏற்கனவே 21 ஆயிரம் மெகாவாட்டை கடந்துவிட்டது. ஆனால் அங்கு மின்சார விநியோகம் 19 ஆயிரம் மெகா வாட் என்ற அளவில்தான் உள்ளது.
நிலக்கரி
இதனால் அங்கு மின்தடை அதிகரித்து உள்ளது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகவும் போதிய அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது இல்லை. இதுவும் நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஏப்ரல் முதல் வாரம் 453 வேகன்ஸ் நிலக்கரி தேவை. ஆனால் இருந்தது என்னவோ 379 வேகன்ஸ் மட்டுமே. இதை வரும் நாட்களில் உயர்த்த வேண்டும். நிலக்கரி தேவை 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பாதிப்பு
இதனால் மின் உற்பத்தி பாதித்து உள்ளது. 12 மாநிலங்களில் இருக்கும் நிலக்கரியை வைத்து இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்று ஆல் இந்தியா பவர் எஞ்சினியர் பெடரேஷன் தலைவர் சைலேந்திர துபே தெரிவித்துள்ளார். இதனால் பல மாநிலங்கள் மின் தடையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.