"வன்னியர்கள் மட்டும்தான் வாழவேண்டும் என எந்த மடையனும் சொல்ல மாட்டான்” - ராமதாஸ் பேச்சு!
சென்னை: "இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது. வன்னியர்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எளிதுதான்" என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்றார்.

வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் இன்று போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்றார் பாமக நிறுவனர் ராமதாஸ். பாமக தலைவர் ஸ்ரீகாந்தி, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் பேசிய ராமதாஸ், "இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது. வன்னியர்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எளிதுதான்" எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இட ஒதுக்கீடு இங்கு இருக்கும் சாதியினருக்கு சரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இங்கு இருக்கும் 300க்கும் மேற்பட்ட சாதியினரை 6 தொகுப்புகளாகப் பிரித்து இட ஒதுக்கீட்டை பங்கிட வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருசிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகநீதியைக் காக்க இதைத் தவிர வேறு வழியில்லை.
இதுதொடர்பாக கோட்டைக்குச் சென்று ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். இட ஒதுக்கீட்டால் தமிழக மக்கள் வளர்ச்சியடைந்தால் அது ஆளும் கட்சிக்குத்தானே பெருமை. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எது தடுக்கிறது. அதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது." எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், "324 சமுதாய மக்களும் வாழவேண்டும், அவர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். வன்னியர்கள் மட்டும்தான் வாழவேண்டும் என எந்த மடையனும் சொல்ல மாட்டான். 324 சமூகங்களுக்காக என்னை தவிர வேறு யாராவது போராட்டம் செய்து உள்ளார்களா?" எனப் பேசியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications