திருமாவின் தைரியம் நமக்கு ஏன் இல்லை? கையை முறுக்கும் காங்கிரஸ்.. திமுகவிற்கு புது சிக்கல்.. போச்சே
சென்னை: திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுக அரசால் ஏற்க முடியாத மது விலக்கு விசயத்தை வலியுறுத்துவதன் மூலமும், கூட்டணி ஆட்சி மற்றும் ஆட்சியில் பங்கு விவகாரத்தை ஊதி பெரிதாக்குவதன் மூலமும் திமுகவுக்கு பெருத்த நெருக்கடியை கொடுத்து வருகிறார் திருமாவளவன்.
அதே பாணி யில் கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் காங்கிரசும் திமுகவுக்கு நெருக்கடிக் கொடுக்க துவங்கியுள்ளது. கடந்த 19-ந்தேதி காங்கிரசின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சத்திய மூர்த்தி பவனில் நடந்தது. மேலிட பொறுப்பாளர்கள் அஜோய்குமார், சூரஜ்ஹெக்டே முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எடுக்கும் முடிவுகளுக்கு துணையாக இருப்போம் என்பது உட்பட 10 தீர்மானங்களை நிறைவேற்றியது செயற்குழு. இதைத்தொடர்ந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை பேச அழைத்தார் செல்வப்பெருந்தகை. அப்போது மைக் பிடித்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற காங்கிரசின் முன்னாள் தலைவரும், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி, ''காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது நம்முடன் கூட்டணியில் இருந்த திமுக, ஆட்சியில் பங்கு பெற்றது. பங்கு கேட்பதை தங்களது உரிமை என்றும் திமுக தெரிவித்தது. கேபினெட்டில் வலிமையாக இருந்தனர் திமுகவினர்.
அதேபோல, மாநிலத்தில் திமுகவுடன் நாம் கூட்டணியில் இருக்கிறோம். அதனால் ஆட்சியில் பங்கு கேட்பது நியாயமானது. கேட்க நமக்கு உரிமையும் இருக்கிறது. ஆனால், அதனை கேட்க தலைவர்கள் தயங்குகிறீர்களே, ஏன் ? கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். அந்த 4 பேரை வைத்திருக்கும் திருமாவளவன், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் ஓங்கி குரல் கொடுக்கிறார். முதல்வரை சந்தித்துவிட்டு வந்த பிறகும் அவரது குரல் மாறவில்லை.
திருமாவளவனுக்கு இருக்கும் தைரியம் நமக்கு ஏன் இல்லை ? அதுவும் 9 எம்.பி.க்கள், 18 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் நமக்கு (காங்கிரஸ் கட்சி) ஏன் அந்த தைரியம் வரவில்லை? இனியும் அப்படி இருக்கத் தேவையில்லை. தமிழகத்தில் காங்கிரசை வளர்க்க வேண்டு மானால் ஆட்சி அதிகாரம் நமக்கு வேண்டும். அதனால் தயங்காமல் ஆட்சியில் பங்கு கேட்பது நமது உரிமை என நினைத்து அதனை திமுக தலைமையிடம் கோரிக்கை வைக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக பேசினார்.
இவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் எம்.பி.க்கள், மாவட்ட தலைவர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தியதுடன், ''கூட்டணி ஆட்சிக்கு திமுக ஒப்புக்கொள்ள மறுத்தால் இனி வரும் தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை துணிச்சலாக எடுங்கள். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிலிருந்தே நம் கோரிக்கையை முன் நிறுத்தலாம்.
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து நிலைகளிலும் 20 சதவீத இடங்களை நாம் கேட்டு பெற வேண்டும். இதனை தர திமுக மறுத்தால் தனித்து போட்டியிட அனுமதிக்குமாறு ராகுல்காந்தியிடம் வலியுறுத்த வேண்டும்’’ என்றும் அழுத்தமாக குரல் எழுப்பினார்கள். இதனை ஏற்க மறுத்த முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், '’கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் காலம் இது கிடையாது. காங்கிரசின் வலிமை என்னவென்பது நமக்குத் தெரியும். நம்முடைய எதிர்பார்ப்பு நியாயமானதுதான்.
ஆனால், கூட்டணி ஆட்சி கோரிக்கையை திமுக விடம் வைக்க வேண்டியது நம் கட்சியின் மேலிடம் தான்'' என்று தெரிவித்திருக்கிறார்கள், கூட்டணி ஆட்சி வேண்டும் என்கிற கருத்தை ஆமோதிக்கும் செல்வபெருந்தகை, ''உங்கள் உணர்வுகளை மேலிடத்தில் சொல்வோம். மேலிடம்தான் முடிவு எடுக்க வேண்டும். அதுவரை நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது'' என்று கட்சியின் செயற்குழுவை சமாதானப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications