என்னது திமுகவுக்கு வாழ்த்தா? பெரம்பலூர் நாம் தமிழர் வேட்பாளரை மாற்றிய சீமான்.. என்ன நடந்தது?
சென்னை: பெரம்பலூர் சட்டசபை தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக ஜான்சிராணி (Perambalur NTK Candidate) அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் திமுக சார்பில் அதே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயலட்சுமிக்கும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பெரம்பலூர் சட்டசபை தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் புதிய வேட்பாளராக சுகன்யா நிறுத்தப்பட்டுள்ளார். என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
வரும் சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சீமான் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஆண்களும், பெண்களும் சமம் என்ற வகையில் 117 தொகுதிகளுக்கு ஆண்களையும், 117 தொகுதிகளுக்கு பெண்களையும் சீமான் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த மாவட்டமாகும். இதனால் அவர் இந்த முறை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 6 ம் தேதி கடைசி நாளாகும். சீமான் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். பிற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
திமுக வேட்பாளருக்கு வாழ்த்து
அந்த வகையில் நாம் தமிழர் சார்பில் பெரம்பலூர் சட்டசபை தொகுதியின் வேட்பாளராக ஜான்சி ராணி அறிவிக்கப்பட்டார். இவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது அவர் திமுக சார்பில் தொகுதியில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு வாழ்த்து கூறினார். அதுமட்டுமின்றி திமுக வேட்பாளர் ஜெயலட்சுமியை மக்கள் ஆதரித்தால் எனக்கு சந்தோஷம் தான் என்று கூறினார்.
வேட்பாளர் மாற்றம்
இதுபற்றி நாம் தமிழர் கட்சிக்கு புகார் சென்றது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது. இதற்கிடையில் ஜான்சி ராணியின் செயலுக்கு எதிராக நாம் தமிழர் மேலிடம் நடவடிக்கை எடுத்தது. உடனடியாக வேட்பாளர் ஜான்சிராணி மாற்றப்பட்டார். புதிய வேட்பாளராக சுகன்யா என்பவர் அறிவிக்கப்பட்டார். சுகன்யா நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
யார் யார் போட்டி?
பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் தற்போது 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் எஸ்டி ஜெயலட்சுமி, அதிமுக சார்பில் தமிழ் செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சிவக்குமார் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இங்கு, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கிய மகேஷ்வரி 18,673 ஓட்டுகளை பெற்றார். இது 7.84 சதவீத வாக்குகளாகும்.
தொகுதி நிலவரம் என்ன?
இந்த தொகுதியை எடுத்து கொண்டால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக திமுகவின் பிரபாகரன் உள்ளார். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். இப்போது பிரபாகரனுக்கு பதிலாக திமுகவில் ஜெயலட்சுமிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக 2011, 2016ல் அதிமுகவின் தமிழ் செல்வன், 2006ல் திமுகவின் ராஜ்குமார், 2001ல் அதிமுகவின் ராஜரத்தினம் ஆகியோர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications