"ரூ.40 ஆயிரம் ரேட்ல டீ-ஷர்ட் அணிந்தீங்களே எப்படி?" வந்து விழுந்த கேள்வி.. சீமான் விளக்கம்!
சென்னை: 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டி-ஷர்ட் அணிந்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குமரனும், துரைமுருகன் அந்த டி-ஷர்ட்டை ஆசைப்பட்டு வாங்கி கொடுத்ததாகவும், அவர்களின் ஆசைக்காகவே அந்த டி-ஷர்ட்டை அணிந்ததாகவும் கூறியுள்ளார்.
அண்மை காலமாக அரசியல்வாதிகள் அணியும் வாட்ச், டி-ஷர்ட் ஆகியவை குறித்து சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய போது, அவர் அணிந்திருந்த பர்பெரி டி-ஷர்ட் பற்றி பாஜக விமர்சித்தது.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்தார்கள். அதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் வாட்ச் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.

ரஃபேல் வாட்ச் விவகாரம்
அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ரஃபேல் வாட்ச்சின் ரசீது ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு ரசீதுக்கு இத்தனை மாதங்கள் தேவையா என்று திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இப்படி அரசியல்வாதிகளின் அணிந்துள்ள சொத்து, உடை, அணிகலன்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

ரூ.40 ஆயிரம் டி-ஷர்ட்
அந்த வகையில் இதேபோன்ற சர்ச்சையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிக்கியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு சீமான் கொடுத்த செல்ஃபி பேசுபொருளானது. அந்த புகைப்படத்தில் சீமான், பர்பெரி டி-ஷர்ட் அணிந்து போஸ் கொடுத்திருந்தார். அந்த டி-ஷர்ட்டின் விலை ரூ.40 ஆயிரமாகும்.

சீமான் விளக்கம்
இந்தியாவின் நான்கு மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் பர்பெரி டி-ஷர்ட், சீமான் அணிந்தது பேசுபொருளானது. ஏனென்றால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணியாற்றிய கட்சியினருக்கு கூட சாப்பாடு போட பணமில்லை என்று சீமான் பேசி இருந்தார். தேர்தல் செலவுக்கே பணமில்லாமல் இருந்த சீமான், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டி-ஷர்ட் அணிந்தது சர்ச்சையானது. இந்த நிலையில் பர்பெரி டி-ஷர்ட் விவகாரம் குறித்து சீமான் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அதில், தம்பிகள் வெற்றிக்குமரனும் துரைமுருகனும் ஆசைப்பட்டு அந்த டி-ஷர்ட்டை வாங்கி வந்தார்கள்.

தம்பிகள் கொடுத்த டி-ஷர்ட்
ராகுல் காந்தி இந்த மாடல் பனியனை போட்டுத்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை சென்றார். அதுபோல் நீங்களும் போடுங்கள் என்று வாங்கி வந்தார்கள். அவர்களின் ஆசைக்காகவே அந்த டி-ஷர்ட்டை அணிந்தேன். அந்த டி-ஷர்ட்டை அணிந்த உடனேயே 40 ஆயிரம் ரூபாய் டி-ஷர்ட் போட்டுட்டாரு என்று கிளம்பிவிட்டார்கள். இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு நாம் பணிகளை பார்க்க போய்விட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications