விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு தீர்மானம் போட்டுட்டு இப்படி சவால் விடுறீங்க! இடும்பை கார்த்திக் கிண்டல்
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற பொதுக்குழு தீர்மானம் குறித்த நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவருக்குப் பாதுகாப்பு வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் போடுவதெல்லாம் தமிழக அரசியல் வரலாற்றில் எவரும் காணாத விசித்திரம் என்றே சொல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் நடந்த 38 நாட்களுக்கு பின், தவெக தலைவர் விஜய் பொதுவெளிக்கு வந்துள்ளார். தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற விஜய், உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளை முன் வைத்து முதல்வர் ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக சாடினார். அதற்கு முன்பாக தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் 8வது தீர்மானமாக, மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவர் விஜய்க்கும், அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுமட்டுல்லாமல் விஜய் பாதுகாப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டின.
இதுகுறித்து நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கட்சியின் தலைவர் (!) என்ற அடிப்படையில், விஜய்க்கு தமிழகக் காவல்துறை பாதுகாப்பை வழங்கும்; வழங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் Y பிரிவும் ஏற்கனவே விஜய்க்கு இருக்கிறது.
இதுமட்டுமல்லாது, Bouncers எனப்படும் கறுப்புடை தரித்த தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்புக்கு அமர்த்தப்படுகிறார்கள். இருந்தபோதிலும், விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனப் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறது தவெக. கட்சியின் தலைவருக்குப் பாதுகாப்பு வேண்டுமென பொதுக்குழுவில் தீர்மானம் போடுவதெல்லாம் தமிழக அரசியல் வரலாற்றில் எவரும் காணாத விசித்திரம் என்றே சொல்லலாம்.
ஒரு பக்கம் கட்சித் தலைவருக்குப் பாதுகாப்பு கொடுங்கன்னு தீர்மானம் போட்டுட்டு, அதே மேடையில, என் தலைவன முடிஞ்சா தொட்டுப் பாருங்கடான்னு வாய்ச்சவடால் விடும் முரண்பாட்டு மூட்டைகளை எல்லாம் அந்தக் கூமூட்டைக்கூட்டத்திலே மட்டும்தான் காண முடியும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் பதிவால் தவெக மற்றும் நாதக இடையில் சோசியல் மீடியாவில் மோதல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications