தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்த சத்துணவுப் பணியாளர்கள்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சத்துணவு ஊழியர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில், காலமுறை ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவுப் பணியாளா்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்கப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சமூக நலத் துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குநர் சங்கீதா உள்ளிட்டோர் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் நிா்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவாா்த்தை மேற்கொண்டனர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஜனவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications