ராஜ்யசபாவுக்கு ஜெயக்குமார் பேரை சொல்லியிருந்தா.. “அட பேசியிருக்கலாமே” - என்ன ஓபிஎஸ் இப்படி சொல்றாரு!
சென்னை : ஜெயக்குமாருக்கு சீட் தரக்கூடாது என நான் சொல்லவில்லை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அவர் பெயரை என்னிடம் சொல்லவே இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் சீட்டை ஜெயக்குமாருக்கு கிடைக்காமல் செய்ததால் தான், ஜெயக்குமார் ஒற்றைத் தலைமை விவாதம் குறித்து வெளிப்படையாகப் பேசினார் எனக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவருக்கு சீட் கொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்த விஷயமே எனக்கு தெரியாது என ஒரே போடாகப் போட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த ஜெயக்குமார், ஒன்றைத் தலைமை தேவை என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மையானவர்கள் அதற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என ஓப்பனாகவே தெரிவித்தார். ராஜ்ய சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணம் ஓ.பி.எஸ் தான் என்பதால், அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார் ஜெயக்குமார். அதன் காரணமாகவே, ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டுவதற்காக 'ஒற்றைத் தலைமை' விவாதம் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார் எனக் கூறப்பட்டது.

ராஜ்ய சபா சீட்
இந்நிலையில், ராஜ்ய சபா வேட்பாளர் தேர்வில் என்ன நடந்தது என தந்தி டிவி பேட்டியில் விளக்கமாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவர் பேசுகையில், "தென் மாவட்டங்களில் ஒருவருக்கு ராஜ்ய சபா சீட் வழங்க வேண்டும் எனக் கேட்டேன். எடப்பாடி பழனிசாமி, மதுரைக்கு கிழக்கே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு கொடுக்கலாம் எனச் சொன்னார். நான் சார்ந்துள்ள முக்குலத்தோர் சமூகத்தில் பிரிவுகள் இருப்பதால் நான் யாருக்கு கொடுக்க சொன்னாலும், மற்ற பிரிவினர் உரிமையோடு கோபம் கொள்வார்கள் என்று சொன்னேன்.

அறிவித்த பிறகுதான்
யாருக்கும் எந்த மன மாச்சர்யமும் இல்லாமல் நான்கு பேரும் கலந்து பேசி 2 வேட்பாளர்களையும் முடிவு செய்வோம். இரண்டு வேட்பாளர்களையும் அறிவித்த பிறகே நாம் ஆலோசனைக் கூட்ட அறையில் இருந்து வெளியே வர வேண்டும். அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொன்னேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி, அண்ணன் ஓபிஎஸ் சொல்லட்டும் எனக் கூறியதாக கே.பி.முனுசாமி என்னிடம் சொன்னார்.

தென் தமிழகத்தில்
நான் திரும்பத் திரும்ப, ராஜ்ய சபா சீட் குறித்த ஆலோசனைக்கு அவரை கூப்பிடச் சொல்லியும், எனக்கு வேறு வேலை இருக்கிறது. அவரை வேட்பாளர் பெயரை சொல்லச் சொல்லுங்கள் எனக் கூறிவிட்டார். அதன்பிறகு, நான் தஞ்சை பகுதியில் உள்ளவர்களுக்கு கொடுக்கலான் என யோசித்தேன். ஆனால், தெற்கில் கொடுக்கச் சொன்னார்கள்.

ஒன்றிய செயலாளர்
நான் சார்ந்திருக்கும் மறவர் சமூகத்தினருக்கு கொடுத்தால், எனக்கு கெட்ட பெயர் வரும் என்றும், எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்துச் சொல்லலாம் எனக் கூறினேன். ஆனால், அவர்கள் என்னையே சொல்லச் சொன்னார்கள். பிறகுதான், சாதாரண ஒன்றிய செயலாளரான தர்மர் பெயரை நான் முன்மொழிந்தேன்.

சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சி.வி.சண்முகம் பெயரை மட்டுமே சொன்னார்கள். ஜெயக்குமார் பெயரையோ, ராஜ் சத்யன் பெயரையோ, கீர்த்திகா முனியசாமி பெயரையோ என வேறு யாரின் பெயரையுமே அவர்கள் தரப்பில் இருந்து சொல்லவே இல்லை.

ஜெயக்குமார்
ஒருவேளை ஜெயக்குமார், சி.வி.சண்முகம் என இருவரின் பெயர்களையும் அவர்கள் சொல்லி இருந்தால், அது தொடர்பாக கலந்து பேசி நாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இரண்டு பேருமே சீனியர்கள். அவர்களை தேர்ந்தெடுப்பதில் ஒன்றும் பிரச்சனை கிடையாது. ஜெயக்குமாருக்கு சீட் தரக்கூடாது என நான் சொல்லவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications