ஐடி விங் மாநில தலைவராக சுஜைனி நியமனம்.. “முதல் முறையாக பெண்”.. ஓபிஎஸ்ஸை கொண்டாடும் ஆதரவாளர்கள்!
சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவராக சுஜைனி எஸ்.எஸ்.ஆர் மருது பாண்டியனை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். சுஜைனி, முன்பு அதிமுக ஐடி விங்கில் சென்னை மண்டல செயலாளராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் வெளியிடும் அறிக்கைகள், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என தமிழ்நாடு அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் ஹெட் வாயிலாகவே வெளியிடப்பட்டு வந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் புதிய லெட்டர் ஹெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு: அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழநாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிடும் முக்கிய அறிவிப்பு என குறிப்பிடப்பட்டுள்ள அதில், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி விங் நிர்வாகிகள்: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவராக சுஜைனி SSR மருது பாண்டியன் நியமிக்கப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஐடி விங் மாநில பொறுப்பாளர்களாக ராஜகோபால், ரமணிகாந்த், கீதாலட்சுமி விவேக், விஜய் பரத், ராஜப்பா, கேசி ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண்டல பொறுப்பாளர்கள்: அதேபோல, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தகவல் தொழில்நுட்ப அணி சென்னை மண்டல பொறுப்பாளராக சரவணன், திருவள்ளூர் மண்டல பொறுப்பாளராக ஆதி.ராம்குமார், திருச்சி மண்டல பொறுப்பாளராக சி.ராமச்சந்திரன், மதுரை மண்டலப் பொறுப்பாளராக நவநீதன், சேலம் மண்டலப் பொறுப்பாளராக கே.சி.லட்சுமணன், கோவை மண்டல பொறுப்பாளராக மணிகண்டன் ரவிச்சந்திரன், வேலூர் மண்டல பொறுப்பாளராக எம்.செண்பகராஜ், விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளராக துரை சேது மாதவன், திருநெல்வேலி மண்டல பொறுப்பாளராக டூரிங் ஆன்றனி தனிஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்கள்: ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2022ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டபோது, ஓபிஎஸ்ஸுடன் இணைந்த பலரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். அவர்களில் ஐடி விங் நிர்வாகிகள் பலரும் அடங்குவார்கள்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். அதிமுக ஐடி விங்கின் திருச்சி மண்டல துணைச் செயலாளர் ராமச்சந்திரன், சென்னை மண்டல இணைச் செயலாளர் சுஜைனி, சென்னை மண்டல துணைச் செயலாளர் விஜய் பாரத் உள்ளிட்டோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர்களுக்கு தமது அணியில் பொறுப்புகளை வழங்கி இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், அவர்களை தற்போது, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தகவல் தொழில்நுட்ப அணியில் நியமித்துள்ளார்.
முதல் முறையாக ஐடி விங் தலைமை பதவியில் பெண்: முன்பு அதிமுக ஐடி விங் சென்னை மண்டல இணைச் செயலாளர் ஆக இருந்த சுஜைனி தற்போது, மாநில தலைவராக ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைமைக்கு முதல் முறையாக பெண் ஒருவரை நியமித்துள்ளார் ஓபிஎஸ், ஜெயலலிதா எனும் பெண் ஆளுமை வழிநடக்கும் தலைவர் ஓபிஎஸ் தான் என அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications