எடப்பாடியோடு ஒன்னு கூடுறாங்களோ? அன்புத் தலைவர் அண்ணாமலை.. ஓபிஎஸ் சொன்ன வார்த்தை!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் "அன்புத் தலைவர்" என்று அழைத்துள்ள சம்பவம் பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓபிஎஸ், சாதி மற்றும் மதங்களை கடந்து அனைவருக்குமான கட்சி பாஜக என்றும், எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் மோடியே பிரதமராக தொடர்வார் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு முறை மோடியின் விஸ்வாசி என்று கூறி வந்துள்ளார். அதிமுக உடனான பிரிவுக்கு பின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதன்பின் பாஜக உடனான நெருக்கம் அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இரு கட்சி நிர்வாகிகளும் நெருக்கம் காட்டி வருகின்றனர்.
அதேபோல் அதிமுக கூட்டணி அமைந்தாலும், எங்களுடன் பயணித்து வரும் அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை பாஜக கைவிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் விரைவில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் பாஜக சிறுபான்மை அணி தரப்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஏசி சண்முகம், பாரிவேந்தர் உள்ளிட்ட பாஜக கூட்டணியில் உள்ள பலரும் பங்கேற்றனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக உரிமையோடு அழைத்த பாஜகவுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். பாஜக சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுவது பாராட்டுக்குரியது. அன்புத் தலைவர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இந்தியாவில் இன்னும் எத்தனை முறை தேர்தல் நடந்தாலும் பிரதமராக நரேந்திர மோடியே வருவார். இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். சாதி, மதங்களை கடந்து அனைவருக்குமான கட்சியாக பாஜக உள்ளது. அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் பண்பு கொண்டவராக மோடி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில், அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ள நிலையில், அண்ணாமலையை ஓபிஎஸ் புகழ்ந்துள்ளார். ஓபிஎஸ் உள்ளிட்டோரை கொண்ட ஒருங்கிணைந்த அதிமுகவாக, பாஜகவோடு கூட்டணி பயணத்தை எடப்பாடி ஆரம்பிக்க உள்ளாரா என்ற கேள்விகளை இது எழுப்பியுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தையும், அதே நேரம், பாஜகவோடு சேர்ந்தால் ஏற்படும் பிரச்சினைகளை நினைத்து வருத்தத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications