தேர்தலில் உள்ளடி வேலை- கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால்... அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் கலகக் குரல்
சென்னை: சட்டசபை தேர்தலில் உள்ளடி வேலை பார்த்து கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்துவதால் அதிமுகவில் புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளர், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர்.
ஆனாலும் முதல்வர் வேட்பாளர், வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ஈபிஎஸ் கையே ஓங்கி இருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், தேர்தலில் தனியே பிரசாரம் செய்தார். சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தோல்விதான் கிடைத்தது.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி
தமது ஆதரவாளர்களை ஈபிஎஸ் அணி திட்டமிட்டே தோற்கடித்துவிட்டது என்பது ஓபிஎஸ் தரப்பு புகார். இந்த கோபத்துடன் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மோதினார் ஓபிஎஸ். ஆனால் இதிலும் ஈபிஎஸ் அணியே வென்றது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தனி ஆவர்த்தன அறிக்கை
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ் அவ்வப்போது தனியே அறிக்கைகளை வெளியிட்டு கோபத்தை காட்டி வருகிறார். அவரை சமாதானப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை தருவதற்கு ஈபிஎஸ் அணி தீவிரமாக சமாதானப் பேச்சு நடத்தி வருகிறது.

தோல்விகள் ஏன்?
இந்த நிலையில் புதிய பஞ்சாயத்தாக, சட்டசபை தேர்தலில் தாங்கள் எப்படி எல்லாம் தோற்கடிக்கப்பட்டோம்; தங்களது மாவட்டத்தில் யார் யார் எல்லாம் எப்படி உள்ளடி வேலை பார்த்தார்கள் என்பதை பக்கம் பக்கமாக விவரிக்கும் மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் மலைபோல் குவிந்து கிடக்கிறதாம். இந்த மனுக்களில் பெரும்பாலும் ஈபிஸ் ஆதரவாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள்தான் உள்ளனவாம்.

மீண்டும் கலகக் குரல்
இதனை கையில் எடுத்திருக்கும் ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் தோல்வி தொடர்பான மனுக்கள் குறித்து விசாரணை நடத்தியாக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறதாம். இந்த விசாரணையின் முடிவில் பாரபட்சம் இல்லாத நடவடிக்கை மிக மிக முக்கியம் எனவும் அழுத்தம் கொடுத்து வருகிறதாம் ஓபிஎஸ் தரப்பு. அதிமுகவில் கலகக் குரல் இப்போது ஓயாது போல!












Click it and Unblock the Notifications