அண்ணாமலையே காரணம்.. 24 மணி நேரமும் உழைத்தார்.. பாராட்டு பத்திரம் வாசித்த ஓபிஎஸ்!
சென்னை: பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கு அண்ணாமலை முக்கிய காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார்.
பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக. அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. அதேசமயம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஓபிஎஸ், தினகரன் உட்பட பாஜக கூட்டணி வேட்பாளர்களும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தனர்.
தொடர்ச்சியாக தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் விலகியுள்ளனர். முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, பெங்களூர் புகழேந்தி ஆகியோர் அதிமுக ஒன்றிணைப்புக் குழுவை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், என்.டி.ஏ கூட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்பினார். இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் நின்ற எனக்கு 3,41,000 வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும் சூழல்தான் தமிழ்நாட்டில் உள்ளது" என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்துவிட்டது, பல இடங்களில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், "அதிமுகவின் தற்காலிக பொறுப்பை ஏற்றுள்ள தற்போதைய தலைமையிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதற்கு தென் மாவட்டங்களில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்ததே காரணம் என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, "அத்துடன், அண்ணாமலையின் கடின உழைப்பும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்க முக்கியமான காரணம். அண்ணாமலை 24 மணி நேரமும் களத்தில் இறங்கி பாஜக வளர்ச்சிக்காக பாடுபட்டார்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஓபிஎஸ், "பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் அனைத்தும் ஒன்றிணையவில்லை என்றால் அதிமுகவால் எந்தக் காலத்திலும் வெற்றிபெற முடியாது" எனத் தெரிவித்தார். தனது அணியில் இருந்து விலகிய ஜேசிடி பிரபாகர், பெங்களூர் புகழேந்தி ஆகியோர் பற்றிய கேள்விக்கு, "அவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும்" என்றும் தெரிவித்தார்.
முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம். "தாய்வழி வந்த தங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நாமதே" என்னும் எம்ஜிஆர் மொழியை மருந்தாகக் கொள்வோம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திவிட்டுப் போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications